பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 19-வது தவணை தொகை, இன்று (பிப் 24) விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல்பூருக்குச் செல்கிறார். அங்கு அவர் கிசான் சம்மன் நிதியின் 19 வது தவணையை வெளியிடுகிறார்.
இதுவரை, 18 தவணைகள் மூலம் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். முந்தைய தவணையில் மொத்தம் 9.58 கோடி விவசாயிகள் பயன் பெற்றனர்.
பிரதமர் கிசான் திட்டம் என்றால் என்ன?
நிலம் கொண்டு விவசாயம் செய்யும் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ. 6,000 வருமானத்தை பெறுவார்கள். இவை மூன்று சம தவணைகளில் விநியோகிக்கப்படும்.
இந்த தவணை ஒவ்வொன்றும் ரூ. 2,000 வீதம், 4 மாதங்களுக்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இதன் தகுதியான குடும்ப உறுப்பினர்களில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் அடங்குவர்.
பி.எம் கிசான் பயனாளியின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
பயனாளியின் நிலையைச் சரிபார்க்க, அதிகாரப்பூர்வ பி.எம் கிசான் இணையதளத்திற்குச் சென்று, பயனாளியின் நிலைப் பக்கத்தை உள்ளிட்டு, “பயனாளி நிலை” என்பதைக் கிளிக் செய்யவும். இதில் உங்கள் ஆதார் எண் அல்லது கணக்கு எண்ணை உள்ளிட்டு, பயனாளியின் நிலையைப் பார்க்க “தரவைப் பெறு” என்பதைக் கிளிக் செய்யவும்.
இ - கே.ஒய்.சி அவசியம்
பி.எம் கிசான் பதிவு செய்த அனைத்து விவசாயிகளும் தங்கள் இ - கே.ஒய்.சி செயல்முறையை முடித்திருக்க வேண்டும். அதன்படி, பி.எம் கிசான் போர்ட்டல் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் இதனை செய்யலாம். பொது சேவை மையங்களில் பையோமெட்ரிக் முறையிலும் இதனை மேற்கொள்ள முடியும்.
பி.எம் கிசான் திட்டத்திற்கு யார் தகுதியற்றவர்கள்?
நிறுவன நில உரிமையாளர்கள், முன்னாள் அல்லது தற்போதைய அரசியலமைப்பு பதவிகளை வைத்திருப்பவர்கள், முன்னாள் அல்லது தற்போதைய மத்திய/மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், பஞ்சாயத்து மாவட்ட தலைவர்கள் இதில் தகுதி பெற முடியாது.
இதற்கிடையில், மாதந்தோறும் ரூ. 10,000 அல்லது அதற்கு மேல் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இதனை பெற தகுதியற்றவர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
பி.எம் கிசான் பலன்களை தகுதியற்ற விவசாயிகள் ஒப்படைப்பது எப்படி?
பி.எம் கிசான் இணையதளத்திற்குச் சென்று 'voluntary surrender of pm-kisan benefits' என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.
இப்போது, பதிவு எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். இத்துடன் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்கி OTP-யை பெற வேண்டும்.
பெறப்பட்ட மொத்த தவணையை காண்பிப்பதற்கு மொபைல் எண்ணை உள்ளிடவும்.
‘உங்கள் PM Kisan Benefit-ஐ சரணடைய விரும்புகிறீர்களா’ என்பதில் உள்ள ‘Yes’ பட்டனைக் கிளிக் செய்து OTPயை உள்ளிடவும்.
பி.எம் கிசான் திட்டப் பலன்களை ஒப்படைத்த பிறகு, இனி அதன் பணப் பலன்களைப் பெற முடியாது என்பதையும், திட்டத்தில் மீண்டும் பதிவு செய்ய முடியாது என்பதையும் விவசாயிகள் நினைவில் கொள்ள வேண்டும்.