/indian-express-tamil/media/media_files/2025/03/06/hOtcuAYkBD8WzZkwgwAp.jpg)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா (PM-VBRY) என்ற புதிய திட்டத்தை சுதந்திர தினத்தன்று தொடங்கியுள்ளது. டெல்லி செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர், ஆகஸ்ட் 15, 2025 முதல் இத்திட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், புதிய பணியாளர்கள் மற்றும் அவர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்திற்காக ரூ.99,446 கோடி மொத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்- ஊழியர்களுக்கான சலுகைகள்:
முதல் முறையாக EPFO-ல் பதிவு செய்யும் ஊழியர்களுக்கு, அவர்களின் மாத வருமானம் ₹1 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், அதிகபட்சமாக ₹15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும்:
முதல் தவணை: பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குப் பிறகு.
இரண்டாம் தவணை: 12 மாதங்கள் நிறைவடைந்த பிறகு. இத்துடன் நிதி விழிப்புணர்வுப் பயிற்சி வகுப்பை முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தவணையின் ஒரு பகுதி, நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஒரு பிரத்யேக சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நிறுவனங்களுக்கான சலுகைகள்:
- EPFO-ல் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள், கூடுதல் பணியாளர்களை நியமித்தால், ஒவ்வொரு புதிய பணியாளருக்கும் மாதத்திற்கு அதிகபட்சமாக ₹3,000 வரை ஊக்கத்தொகை பெறலாம்.
- பெரும்பாலான துறைகளுக்கு இந்த உதவி இரண்டு ஆண்டுகள் வரை கிடைக்கும்.
- உற்பத்தித் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு இது நான்கு ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
- பணியாளர்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக உள்ள நிறுவனங்கள் குறைந்தபட்சம் 2 கூடுதல் பணியாளர்களையும், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5 கூடுதல் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.
आज 15 अगस्त के ही दिन मेरे देश के युवाओं के लिए ₹1 लाख करोड़ की प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना लागू हो रही है..
— Manohar Lal (@mlkhattar) August 15, 2025
:आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी #IndependenceDay2025pic.twitter.com/6VaUwfNYq3
பணியாளர்களுக்கான விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- ஆகஸ்ட் 15, 2025-க்குப் பிறகு, EPFO-ல் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தில் சேர்ந்திருக்க வேண்டும்.
- மாத ஊதியம் ரூ.1 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
- ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி UMANG செயலி மூலம் UAN (Universal Account Number) உருவாக்க வேண்டும்.
- முதல் தவணை பெற 6 மாதங்கள், இரண்டாம் தவணை பெற 12 மாதங்கள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.
- தனிப்பட்ட விண்ணப்பம் எதுவும் தேவையில்லை. PF கணக்கு தொடங்கி, ஆதார் இணைக்கப்பட்டவுடன் தகுதி தானாகவே கண்டறியப்படும். பணம் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.
நிறுவனங்களுக்கான விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- ஷிராம் சுவிதா போர்ட்டல் மூலம் EPFO குறியீட்டைப் பெற்றிருக்க வேண்டும்.
- EPFO-ன் முதலாளி லாகின் போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- தகுதியுள்ள ஊழியர்களை நியமித்து, அவர்களின் ஊதிய மற்றும் பதிவு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் PF பங்களிப்புகளுடன் மின்னணு சலான் (ECR) சமர்ப்பிக்க வேண்டும்.
- புதிய பணியாளர்களைக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் பணியில் வைத்திருக்க வேண்டும்.
- ஊக்கத்தொகை, ஒவ்வொரு 6 மாதங்களுக்கும், PAN-டன் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டம் வேலைவாய்ப்புகளை முறைப்படுத்துவதையும், நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், வேலைக்குச் சேர்ந்த உடனான ஊக்கத்தொகையையும், வேலை தக்கவைப்புடன் இணைப்பதன் மூலம், PM-VBRY வேலைவாய்ப்பில் ஒரு நிலையான தன்மையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.