பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,500 கோடி ரூபாய் மோசடி வெளிச்சத்துக்கு வந்ததுமுதல், அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அதிகம் பேசமால் இருந்த இந்திய ரிசர்வ் வங்கி, தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதோடு,
கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை குறைந்தது 3 முறை வங்கிகளுக்கு ரகசிய எச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2016ல்தான் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் அந்த பொறுப்பை ஏற்றார். அதன்பின் செப்டம்பர் 2016ல் அண்டை நாடான வங்காள தேசத்தின் மைய வங்கி, சைபர் குற்றவாளிகளில் பாதிப்புக்கு உள்ளானபோதும், பின்னர் இதே போன்றதொரு தாக்குதல் யூனியன் வங்கியின் SWIFT முறையின் மீதும் நடந்தபோதும் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ் எஸ் முந்த்ரா வங்கிகளுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியதாகத் தெரிகிறது.
மறுபுறம், பிஎன்பி.யில் நடந்த மோசடியைப் போன்றவை, இனி நடக்காமல் தவிர்ப்பது எப்படி, அதற்கு செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் பரிந்துரைக்க, ஒரு குழுவையும் ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. இதன் தலைவராக ஒய் எச் மல்லிகம் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறையில் ஆடிட்டரான 80 வயது மல்லிகம், ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் கடந்த 17 ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறார். இவர் தலைமையிலான குழு SWIFT உள்ளிட்ட முறைகளை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் மற்ற வகையிலும் குற்றச் செயல்கள் நடக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய தொழில்நுட்ப ரீதியான தடுப்பு வழிமுறைகளயும் சேர்ந்தே பரிந்துரைக்கும் என கூறப்பட்டுள்ளது.