குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீடுகளில் ஆர்வம் கொண்டவர்கள் பெரும்பாலும் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி) அல்லது ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி) ஆகியவற்றை விரும்புகின்றனர். வங்கிகளைத் தவிர, இந்திய அஞ்சல் துறையும் பல்வேறு நிதித் திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. அதன்படி ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி) மற்றும் ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி) ஆகியவை அஞ்சல் அலுவலகத்தின் முக்கிய முதலீட்டு திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு தங்கள் பணத்தை தொடர்ந்து சேமிக்கவும், உத்தரவாதமான வருமானத்தைப் பெறவும் உதவுகின்றன.
அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிடின் முக்கிய அம்சங்கள்:
கணக்கு திறக்கும் வசதி: முதலீட்டாளர்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ எத்தனை ஆர்.டி கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். நாமினி நியமனம் கணக்கு திறப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ எந்த நேரத்திலும் செய்யலாம்.
மாதாந்திர தவணை: ஆர்.டி கணக்குகள் மாதாந்திர தவணைகளில் செயல்படுகின்றன. ரொக்கம் அல்லது காசோலை மூலம் பணம் செலுத்தலாம். காசோலை அரசாங்க கணக்கில் வரவு வைக்கப்பட்ட நாளே வைப்புத்தொகை தேதியாகக் கருதப்படும்.
தாமதத்திற்கான அபராதம்: மாதாந்திர தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ரூ. 5 க்கு 5 பைசா என்ற குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்படும். இதை அபராதத்துடன் சேர்த்து, நடப்பு மாதத் தவணைக்கு முன் செலுத்தலாம். தொடர்ச்சியாக நான்கு தவணைகள் செலுத்தத் தவறினால், கணக்கு நிறுத்தப்படும்.
பணத்தை திரும்பப் பெறும் வசதி: கணக்கு திறக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, மொத்த வைப்புத்தொகையில் 50% வரை திரும்பப் பெற இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.
குறைந்தபட்ச வரம்பு: அஞ்சல் அலுவலக ஆர்.டி-ஐ தொடங்க குறைந்தபட்சம் மாதத்திற்கு ரூ. 10 இருந்தால் கூட போதும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
மைனர்களுக்கான வசதி மற்றும் வரிச் சலுகைகள்: 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மைனர்கள் தங்கள் சொந்த ஆர்.டி கணக்குகளைத் திறக்கலாம். எளிதாக பணத்தை திரும்பப் பெறும் வசதியுடன், வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கும். ஆறு தவணைகளை முன்கூட்டியே செலுத்தினால் தள்ளுபடி வசதியும் உள்ளது.
அஞ்சல் அலுவலக ஃபிக்ஸட் டெபாசிட்டின் முக்கிய அம்சங்கள்:
ஒரே தவணை முதலீடு: எஃப்.டி திட்டங்கள் ஒரு பெரிய தொகையை ஒரே தவணையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றன.
ஆபத்து இல்லாத மற்றும் சந்தை சுதந்திரம்: ஆர்.டி திட்டங்களை போலவே, அஞ்சல் அலுவலக எஃப்.டி திட்டங்களும் ஆபத்து இல்லாதவை மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு பொருந்தாதவை. எஃப்.டி திட்டங்களை ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்திற்கு திறக்கலாம்.
குறைந்தபட்ச வரம்பு: எஃப்.டி-ல் வைப்புத் தொகைக்கான குறைந்தபட்ச தொகை ரூ. 200 ஆகும். அதிகபட்ச வரம்பு இல்லை.
வரிச் சலுகைகள்: அஞ்சல் அலுவலக எஃப்.டி திட்டங்களில் ஈட்டப்படும் வட்டி விகிதத்தில் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குகின்றன.
முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திட்டங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். முதலீடு செய்வதற்கு முன் திட்டங்களின் அனைத்து விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முழுமையாக அறிந்து கொள்வது அவசியம்.