இந்திய தபால் துறையில் ஒன்பது வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில், சில திட்டங்களில் முதலீடு செய்யும் பட்சத்தில் வருமான வரியில் நீங்கள் விலக்கு பெறலாம். நேர வைப்புக் கணக்கு (TD), பொது வைப்பு நிதி கணக்கு (PPF), மூத்த முடிமக்கள் சேமிப்புத் திட்டம்(SCSS) மற்றும் தேசிய சேமிப்பு ஆவணங்கள்(NSC) ஆகிய திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், வரி விலக்கு பெறலாம். இந்த திட்டங்கள் மூலம், ஒரு நிதியாண்டில், ரூ.1.5 லட்சம் வரை வரியில் இருந்து விலக்கு பெற முடியும்.
நேர வைப்புக் கணக்கு
டைம் டெபாசிட் அல்லது நிரந்தர டெபாசிட்டின் ஒரு வருட, இரண்டு வருட மெச்சூரிட்டி காலங்களில் 6.9 சதவிகிதம் வட்டி பெற முடியும். ஐந்து வருட டைம் டெபாசிட் அக்கவுண்ட்டில், 7.7 சதவிகித வட்டியுடன் நீங்கள் திரும்பிப் பெற முடியும். வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்படும், ஆனால் காலாண்டுக்கு கணக்கிடப்படுகிறது. 5 வருட திட்டத்தில் இணைவதன் மூலம், செக்ஷன் 80C வருமான வரி சட்டம், 1961 மூலம் ஆதாயம் பெற முடியும்.
15 வருட பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு
இந்த திட்டம் உங்களுக்கு வருடத்திற்கு 7.9 சதவிகித வட்டியில் பயன் தருகிறது. ஒருவர், வெறும் 100 ரூபாய் கொண்டு இந்த திட்டத்தை துவங்க முடியும். ஆனால், நிதியாண்டில் குறைந்தது ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம், 1,50,000 வரை செலுத்தலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் இத்திட்டத்தை துவங்கலாம். இத்திட்டம், வருடத்திற்கு 8.6 சதவிகித வட்டி தருகிறது. இத்திட்டத்தை துவங்க குறைந்தபட்சம் 1000 ரூபாய் இருந்தால் போதும். அதிகபட்சம், ரூ.15 லட்சத்தை தாண்டக் கூடாது.
தேசிய சேமிப்பு ஆவணங்கள்
இத்திட்டம் வருடத்திற்கு 7.9 சதவிகித வட்டி தருகிறது. இதன் வட்டி ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கப்படும். ஆனால், முதிர்ச்சி காலத்தில் தான் பணம் கிடைக்கும். 100 ரூபாய்க்கு, 5 வருடங்கள் கழித்து, 146.93 முதிர்ச்சி காலத்தில் கொடுக்கப்படும்.