முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுப்பது இன்றளவிலும் கடினமான பணி தான். ஏனென்றால், சந்தையில் திரும்பிய பக்கம்லாம் பல வகையான சேமிப்பு திட்டங்கள் அபாயங்களுடன் வருகின்றன. அவற்றில், பாதுகாப்பானது மற்றும் லாபகரமான திட்டத்தை தேடுவோருக்கான செய்தி தான் இது. நிச்சயம் இந்திய போஸ்ட் வழங்கும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் சிறந்த தேர்வாக அமையும்.
இந்தியா போஸ்ட் மற்றும் பல வங்கிகள் வழங்கும் இத்திட்டம் அதன் முதிர்வு காலத்தில் 124 மாதங்கள் (10 ஆண்டுகள் 4 மாதங்கள்) முதலீட்டை இரட்டிப்பாக்குகிறது.
இந்த திட்டம் முதலில் 1988இல் இந்திய போஸ்டால் கொண்டுவரப்பட்டது. ஆனால்,இத்திட்டம் பணமோசடிக்கு பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக கூறி, 2011இல் அரசாங்கக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது பல மாற்றங்களுடன் KVP திட்டத்தை மீண்டும் இந்திய போஸ்ட் களமிறக்கியுள்ளது.இதில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய பான் கார்ட் அவசியம். அதே போல, ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்யும் பட்சத்தில் வருமான வரி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம்
இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 6.9 சதவிகிதமாக உள்ளது. இதை இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த கிசான் விகாஸ் திட்டத்தில் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ சேரலாம். 10 வயதுக்கு மேலான மைனர் பெயரில் தனியாகவோ, பெற்றோருடன் கூட்டாகவோ முதலீடு செய்யலாம்.
கணக்கு பரிமாற்றம்
KVP இன் கீழ் உள்ள கணக்கு, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு குறிப்பிட்ட சில நிபந்தனைகளில் மாற்றப்படுகிறது. கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், அது அவர் நியமிக்கப்பட்ட நபர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றப்படலாம்.
கூட்டு கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், அவருடன் கணக்கு வைத்திருந்த மற்றவர்களுக்கு மாற்றப்படலாம் நீதிமன்ற உத்தரவிட்டால் மாற்றப்படும். குறிப்பிட்ட சில உயர் அதிகாரிகளுக்கு உறுதிமொழி அளிப்பதன் மூலம் மாற்றலாம்.
நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் திட்டத்தை தொடர முடியும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும். இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.
இதில் கணக்கு வைத்திருப்பவர்கள், கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்கு பிறகு தேவைப்பட்டால் பணத்தை எடுக்கலாம். அச்சமயத்தில், பணம் எடுக்கும் மாதம் வரை வட்டி வகிதம் கணக்கிட்டு, உங்களது பணம் திருப்பி அளிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil