/indian-express-tamil/media/media_files/2025/03/03/Vu5uGfX2cDvLZilC4Pq8.jpg)
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், உங்கள் ஓய்வு காலத்திற்கான ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாக விளங்குகிறது. மேலும், உங்களுடைய குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்கும் இது பலன் அளிக்கக் கூடும்.
பி.பி.எஃப் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் 56-வது வயதில் ஓய்வூதியமாக சுமார் ரூ. 39,000 வரை பெற முடியும். அதோடு மட்டுமல்லாமல், சுமார் ரூ. 93 லட்சம் வரையிலான ஓய்வூதிய கார்பஸையும் உருவாக்க முடியும். இதனை செயல்படுத்த உங்கள் சேமிப்பு முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
நீங்கள் பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் கணக்கைத் தொடங்கலாம். கணக்கைத் தொடர்ந்து செயல்படுத்த குறைந்தபட்ச தொகையை அவ்வப்போது டெபாசிட் செய்ய வேண்டும். பி.பி.எஃப் முதலீட்டில் இருந்து பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய இரண்டுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகின்றன. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின்படி ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரையிலான பி.பி.எஃப் முதலீடுகளுக்கு வரிச் சலுகை கிடைக்கிறது.
பி.பி.எஃப் திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் கூட்டு வட்டி முறையில் செயல்படுகிறது. கூட்டு வட்டி என்பது உங்கள் முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டியானது மீண்டும் முதலீடு செய்யப்பட்டு, அந்த வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும் முறையாகும். ஒரு முதலீட்டாளர் ஒரு நிதியாண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், ஆனால் மொத்த முதலீட்டுத் தொகை ரூ. 1.50 லட்சத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நிதியாண்டின் மார்ச் 31-ஆம் தேதியும் இந்த முதலீட்டுத் தொகைக்கான வட்டி வரவு வைக்கப்படும். பி.பி.எஃப் திட்டத்தின் அதிகபட்ச வட்டிப் பலன்களைப் பெற, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதிக்குள் முதலீடு செய்தால் சிறப்பானதாக இருக்கும்.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்கு பின்னர், கணக்கு வைத்திருப்பவர் தன்னுடைய முதலீடு மற்றும் வட்டித் தொகையை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கணக்கை கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வசதி இருக்கிறது. கணக்கை நீட்டிக்கும் காலத்திலும், அப்போது நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதம் பொருந்தக் கூடியதாக இருக்கும். கணக்கு நீட்டிக்கப்பட்ட ஐந்து ஆண்டு காலத்தில், உங்கள் முதலீட்டில் இருந்து அதிகபட்சமாக 60 சதவீதம் வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒருமுறை பணத்தை திரும்பப் பெற இயலும்.
இனி இந்தக் கணக்கில் பணம் பெறுவதற்கான உதாரணத்தை பார்க்கலாம். ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும், ரூ. 1.5 லட்சத்தை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக கருதலாம்.
15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ. 22,50,000
மதிப்பிடப்பட்ட வட்டி வருமானம்: ரூ. 18,18,209
மொத்த கார்பஸ்: ரூ. 40,68,209
இந்த கார்பஸை மேலும் மூன்று முறை, அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு தலா 5 ஆண்டுகள் என நீட்டிக்கிறார் என்று கருதலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் 5-ஆம் தேதிக்குள் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்கிறார் என்றால், அடுத்த 30 ஆண்டுகளில் அவரது மொத்த முதலீடு சுமார் ரூ. 45,00,000 ஆக இருக்கும். இதற்கான மதிப்பிடப்பட்ட வட்டி வருமானம் சுமார் ரூ. 1,09,50,911 ஆக இருக்கும். இதனால் அவரது மொத்த கார்பஸ் சுமார் ரூ. 1,54,50,911 ஆக உயர்ந்திருக்கும்.
இந்த மொத்தத் தொகையில் 60 சதவீதத்தை அவர் திரும்பப் பெற்றால், அவர் பெறும் தொகை சுமார் ரூ. 92,70,546.6 ஆக இருக்கும். மீதமுள்ள தொகை சுமார் ரூ. 61,80,364 ஆக இருக்கும். இந்த மீதமுள்ள கார்பஸை மேலும் ஒரு வருடம் கணக்கில் வைத்திருந்தால், ஓராண்டுக்குப் பிறகு மதிப்பிடப்பட்ட கார்பஸ் சுமார் ரூ. 66,19,170.27 ஆகவும், வட்டியின் மூலம் சுமார் ரூ. 4,38,805 பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை அவர் ஒவ்வொரு ஆண்டும் வட்டித் தொகையை மட்டும் பெற விரும்பினால், அவர் வருடத்திற்கு சுமார் ரூ. 4,69,961 பெறலாம். இது மாதத்திற்கு சுமார் ரூ. 39,163.42 ஆகும். ஆனால், ஒரு முதலீட்டாளர் தன்னுடைய 25 வயதில் கணக்கு தொடங்கினால் மட்டுமே 56 வயதில் இந்தப் பணப்பலன்களை அடைய முடியும்.
ஆனால், ஒரு முதலீட்டாளர் 25 வயதில் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 56 வயதிற்குள் இந்த இலக்குகளை எளிதாக அடைய முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.