குறைந்த கட்டண விமான சேவைகளை அறிமுகப்படுத்திய இண்டிகோ விமான சேவை மையமும் 15 கிலோவிற்கு மேலாக எடுத்துச் செல்லப்படும் பேக்கேஜ்ஜிற்கான கட்டணத்தை 33%மாக உயர்த்துகின்றது. முன்பதிவு செய்யப்படும் கூடுதல் பேக்கேஜ்ஜின் கட்டணமும் உயருகின்றது. அதன்படி 15 கிலோவிற்கு மேலே செல்லும் 5, 10, 15, மற்றும் 30 கிலோவிற்கு ரூ.1,900, ரூ. 3,800, ரூ. 5,700 மற்றும் ரூ. 11,400 முறையே விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.
ஏர் இந்தியா விமான சேவை மட்டுமே தற்போது, பயணிகள் 25 கிலோ வரையிலான பேக்கேஜ்ஜினை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கும் ஒரே நிறுவனம் ஆகும். மிகக் குறைந்த அளவு விமானக் கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்கும் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோஏர் போன்ற நிறுவனங்கள் முன்பதிவு செய்யப்படாத பேக்கேஜின் ஒவ்வொரு கிலோவிற்கும் 400 ரூபாய் வசூலிக்க திட்டமிட்டமிருப்பதாக அறிவிப்பு.
கடந்த ஆகஸ்ட்டில் இண்டிகோ விமான சேவை முன்பதிவு செய்யப்படும் ஒவ்வொரு 5,10,15, மற்றும் 30 கிலோ பேக்கேஜ்ஜிற்கு ரூ. 1425, ரூ. 2850, ரூ. 4275, மற்றும் ரூ, 8550 என்ற கட்டணத்தை நிர்ணயத்திருந்தது. முன்பதிவு செய்யப்படாத ஒவ்வொரு கிலோவிற்கும் ரூபாய் 300 வரை விமான நிலையத்தில் வசூலித்துக் கொண்டிருந்தது இண்டிகோ. கோஏர் கட்டணங்கள் அனைத்தும் இண்டிகோவின் கட்டணங்களுக்கு இணையாகவே உள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமான சேவை, முன்பதிவு செய்யப்படும் ஒவ்வொரு 5, 10, 15, 20, மற்றும் 30 கிலோ பேக்கேஜ்ஜிற்கு ரூ. 1600, ரூ. 3200, ரூ. 4,800, ரூ. 6,400, மற்றும் ரூ. 9,600 வரையில் விலை நிர்ணயம் செய்திருக்கின்றது.
சமீபகாலமாக உயர்ந்திருக்கும் விமான எரிபொருளின் விலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இண்டிகோ 1000 கிலோமீட்டருக்கு குறைவான பயணத்திற்கான கட்டணத்தில் ரூ. 200ம், 1000 கிலோமீட்டருக்கு அதிகமாக இருக்கும் பயணத்திற்கான கட்டணத்தில் ரூபாய் 400ம் உயர்த்தியிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.