வங்கியில் வைப்பு நிதிகளுக்கு (FD) வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பை பாதுகாப்பாகவும், அதிக லாபகரமாகவும் முதலீடு செய்ய மாற்று வழிகளை நாட வேண்டியது அவசியம். இந்த சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் சேமிப்புப் பத்திரங்கள், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் சில சிறு நிதி வங்கிகளின் (SFB) வைப்பு நிதிகள் ஆகியவை மாற்று முதலீட்டுத் தேர்வுகளாக உருவெடுத்துள்ளன. இவை அதிக வருமானத்தையும், மூலதன பாதுகாப்பையும், உறுதி செய்கின்றன.
தங்கள் நிலையான வருமான முதலீடுகளுக்கு அதிகபட்ச மூலதன பாதுகாப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள், அதிக லாபம் தரும் பல வங்கிகளில் தங்கள் வைப்பு நிதிகளை பிரித்து முதலீடு செய்யலாம். வட்டி விகிதங்கள் குறையும்போது அதிக வட்டி வருமானத்தைப் பெற நீண்ட கால முதலீடுகளை பரிசீலிப்பது நல்லது.
1. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) முதலீடு செய்வது ஒரு சிறந்த வழியாகும். இது காலாண்டுக்கு 8.2% வட்டி வழங்குகிறது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்கள் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இதன் லாக்-இன் காலம் ஐந்து ஆண்டுகள். மேலும், ஒருமுறை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 30 லட்சம் ஆகும். ஒரு வருடத்திற்குள் கணக்கு மூடப்பட்டால், வட்டி எதுவும் செலுத்தப்படாது. கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு பிறகு ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் மூடப்பட்டால், அசல் தொகையிலிருந்து 1.5% கழிக்கப்படும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன் மூடப்பட்டால், அசல் தொகையிலிருந்து 1% கழிக்கப்படும்.
2. ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்டுகள்
மூத்த குடிமக்கள் ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்டுகளில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம். இவை அரசு ஆதரவைக் கொண்டுள்ளன மற்றும் 8.05% வழங்குகின்றன. இந்த பத்திரங்கள் ஏழு ஆண்டுகள் கால அவகாசம் கொண்டவை, மேலும், ஒவ்வொரு அரை வருடத்திற்கும் ஒருமுறை வட்டி செலுத்தப்படுகிறது. இந்த பத்திரங்களில் முதலீட்டிற்கு உச்சவரம்பு இல்லை. ஆர்.பி.ஐ ரீடெய்ல் டைரக்ட் போர்டல் மூலம் பாண்ட் லெட்ஜர் கணக்கைத் திறந்து முதலீட்டாளர்கள் இந்த பத்திரங்களை வாங்கலாம்.
மூத்த குடிமக்கள் பணத்தை மீட்டெடுக்கும் நேரத்தில் தங்கள் வயதின் அடிப்படையில் முன்கூட்டியே பணத்தை மீட்டெடுக்கலாம். 60-70 வயதுக்குட்பட்டவர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே பணத்தை எடுக்கலாம். 70-80 வயதுடையவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே பணத்தை மீட்டெடுக்கலாம். இதில் கடந்த ஆறு மாத வட்டியிலிருந்து 50% அபராதம் கழிக்கப்படும். பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான ஆன்லைன் தளமான GoldenPi இன் சி.இ.ஓ அபிஜித் ராய் கூறுகையில், இவை அரசு ஆதரவு பெற்றவை என்பதால், இந்த பத்திரங்களில் எந்தவொரு அபாயமும் இல்லை என்று கூறினார்.
3. சிறு நிதி வங்கிகளில் வைப்புநிதி
பெரிய வணிக வங்கிகளுடன் ஒப்பிடுகையில், சிறு நிதி வங்கிகள் (SFB) வைப்பு நிதிகளுக்கு 8% க்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வங்கிகள் ஆர்.பி.ஐ-ஆல் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இருப்பினும், ஒரு வங்கியில் பெரிய தொகையை வைப்பதைத் தவிர்த்து, மொத்த முதலீட்டை காப்பீட்டு வரம்பிற்குள் வைத்திருப்பது நல்லது.