எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கிழிந்த மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுக்களை இலவசமாக மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பினை உங்களின் வங்கி உங்களுக்கு வழங்கியுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை தங்களுடைய எஸ்பிஐ வங்கி கிளையில் மாற்றிக் கொள்ளலாம். மாற்றியமைக்கப்பட்ட சேவை கட்டணங்களின் படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ரூபாய் 5000/- மொத்த மதிப்புடைய 20 எண்ணிக்கையிலான கிழிந்த மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வசதியை இந்த பொதுத்துறை வங்கி வழங்குகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் எஸ்பிஐ தனது சேவைக் கட்டணங்களை மாற்றியமைத்தது. மிகப்பெரிய அரசுடமையாக்கப்பட்ட வங்கியான எஸ்பிஐ யின் மாற்றியமைக்கப்பட்ட சேவைக் கட்டணங்களை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
அனுமதிக்கப்பட்ட 20 நோட்டுகளைவிட கூடுதலான அளவில் கிழிந்த மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்றால் கூடுதலாக உள்ள ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்கும் ரூபாய் 2 மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சேர்த்து செலுத்த வேண்டும். ரூபாய் 5,000/- விட கூடுதலாக உள்ள ஒவ்வொரு நோட்டுக்கும் ரூபாய் 2/- அல்லது ரூபாய் 1000/- க்கு ரூபாய் 5/- மற்றும் ஜிஎஸ்டி என்ற அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும். எதன் மதிப்பு அதிகமாக இருக்கிறதோ அதை வங்கி கட்டணமாக வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கும்.
வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மாற்றித்தரபட மாட்டாது.
கிழிந்த மற்றும் அழுக்கடைந்த, சிதைந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிவிட்டு புதிய ரூபாய் நோட்டுகள் வழங்குவதற்கு, பாரத ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் விதிகளை எஸ்பிஐ கண்டிப்புடன் கடைப்பிடிக்கிறது. எனவே வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் எஸ்பிஐ மாற்றித் தராது.
அழுக்கடைந்த நோட்டுகள் என்றால் என்ன?
அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் என்றால் அன்றாடம் பயன்பாட்டால் அதிகப்படியாக பாதிப்படைந்த ரூபாய் நோட்டுகள். மேலும் ஒன்றாக ஒட்டப்பட்ட இரண்டு துண்டுகள் ஆன ரூபாய் நோட்டுகளும் இதில் அடங்கும்.
எந்தவிதமான ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது?
ஏதாவது அரசியல் கருத்துகள் எழுதப்பட்ட நோட்டுகள் அதன் மதிப்பை இழந்துவிடுகின்றன. எனவே அவ்வாறு எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் அவற்றை நிராகரிக்க வங்கிகளுக்கு எல்லா உரிமைகளும் உள்ளன. மேலும் மாற்றுவதற்கு கொண்டுவரப்பட்ட ரூபாய் நோட்டுகள் வேண்டுமென்றே கிழிக்கப்பட்டு, அல்லது வெட்டப்பட்டு இருந்தாலோ அவற்றை வங்கி மாற்றித்தராது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"