கடன் பெற விண்ணப்பிக்கும் போது, ஒரு நீண்ட செயல்முறையை பின்பற்ற வேண்டும். இது ஆரம்பகட்ட தகவல்களை தேடுவதில் தொடங்கி, உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் விநியோகம் செய்வதில் முடிவடையும். மற்ற அனைத்தும் இந்த வரம்பிற்குள் அடங்கும்.
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சில முக்கிய விஷயங்களை பற்றி ஒருவர் அறிந்திருக்க வேண்டும். இது, நீங்கள் கையெழுத்திடுவதற்கு முன்பு உங்களை தயார்படுத்தும்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்:
1. கிரெடிட் ஸ்கோர்: நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் போது, கடன் வழங்குபவர்கள் உங்கள் கடன் தகுதியை (creditworthiness) சரிபார்க்கிறார்கள். இது நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்தும் திறனைக் கொண்டிருக்கிறீர்களா என்பதைக் காட்டுகிறது. இது 300-900 வரையிலான மூன்று இலக்க எண்ணால் குறிக்கப்படுகிறது. CRIF High Mark போன்ற கடன் தகவல் நிறுவனங்களால் உங்கள் கடன் தரவுகளின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.
2. முன்கூட்டியே செலுத்துதல் (Prepayment or Foreclosure): நீங்கள் கடன் வாங்கும் போது, இறுதி தேதிக்கு முன்பே உங்கள் நிலுவை தொகையை செலுத்த விரும்பும் சில சூழ்நிலைகள் இருக்கலாம். கடனை முன்கூட்டியே செலுத்தும் இந்த செயல்முறை, முன்கூட்டியே செலுத்துதல் (prepayment) என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு சில கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
3. நிலையான வட்டி விகிதம் (Fixed Rate of Interest): வட்டி விகிதம் நிலையான வட்டி விகிதத்திலோ அல்லது மாறுபடும் விகிதத்திலோ வசூலிக்கப்படுகிறது. மாறுபடும் வட்டி விகிதம் என்பது கடன் காலம் முழுவதும் வட்டி விகிதம் மாறுபடும் என்பதாகும். உதாரணமாக, பொருளாதாரம் குறைந்த வட்டி விகித சுழற்சிக்கு செல்லும் போது, விகிதங்கள் குறையலாம். மாறாக, பொருளாதாரம் அதிக வட்டி விகித சுழற்சிக்கு செல்லும் போது அவை உயரும். இருப்பினும், தனிநபர் கடன்கள் பொதுவாக நிலையான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன. அதாவது கடன் காலம் முழுவதும் அது மாறாது.
4. செயலாக்ககட்டணம் (Processing Fee): கடன் வழங்குபவர்கள், கடனை செயலாக்குவதற்கு ஒரு கட்டணத்தை வசூலிக்கிறார்கள். இது செயலாக்கக் கட்டணம் என்று அழைக்கப்படுகிறது. வங்கிகள் பொதுவாக செயலாக்க கட்டணத்தை கடன் விண்ணப்பதாரரின் கடன் தொகையிலிருந்து கழித்த பின்னரே கடனை வழங்குகின்றன. உதாரணமாக, கடன் தொகை ரூ. 5 லட்சம் மற்றும் செயலாக்கக் கட்டணம் ரூ. 5,000 எனில், கடன் வாங்கியவருக்கு ரூ. 5 லட்சம் (-) ரூ. 5,000 = ரூ. 4.95 லட்சம் கிடைக்கும்.
5. ஆட்டோ டெபிட்: ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கிலிருந்து இ.எம்.ஐ வடிவத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிகள் ஆட்டோ டெபிட் செய்வது பொதுவான நடைமுறையாகும்.
6. பிணையம் (Collateral): இது கடன் விண்ணப்பதாரர், கடன் வழங்குபவருக்கு வழங்கும் பாதுகாப்பை குறிக்கிறது. இதன் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பின் மதிப்பு பொதுவாக கடன் தொகையை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக, ஆர்.பி.ஐ தங்கக் கடன் தொடர்பான விதிகளை திருத்தியது. அதன்படி, தங்கத்தின் விலையில் 75 சதவீதத்திற்கு மேல் கடன் தொகை இருக்கக்கூடாது.
தனிநபர் கடன்களுக்கு பொதுவாக பிணையம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், அவை அன்செக்யூர்ட் லோன்ஸ். பிணையம் தேவைப்படும் கடன்கள், செக்யூர்ட் லோன்ஸ் ஆகும்.