மகள்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் நோக்கில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை ‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ’ பிரச்சாரத்தின் கீழ் தொடங்கினார். இது ஒரு சிறிய வைப்புத் திட்டமாகும், இது பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளை பூர்த்தி செய்யும். இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இந்திய தபால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஒரு பெற்றோர் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம்.
சுகன்யா சமிர்தி திட்டத்தின் வட்டி விகிதம்
இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் - ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காத்திற்கு உதவியாக இருக்கும்.இந்த சேமிப்புத் திட்டத்தை 14 ஆண்டுகள் வரை மட்டுமே தொடர முடியும். எனவே ஓராண்டிற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 14 ஆண்டுகள் முடிவில் ரூ.14 லட்சம் ஆகிறது. 21 ஆண்டுகளுக்குப் பின், வட்டி சேர்க்கப்பட்டு ரூ.46 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது. இதேபோல் ஆண்டிற்கு ரூ.50,000 என 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், இறுதியாக ரூ.23 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது.
சுகன்யா சமிர்தி கணக்கினை தொடங்குவது எப்படி? தகுதி என்ன?
இந்த சேமிப்பு திட்டமானது குழந்தை பிறந்த உடனே கூட ஆரம்பித்துக் கொள்ளலாம்.பெண் குழந்தைகள் மட்டுமே சுகன்யா சமிர்தி கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள்.கணக்கு திறக்கும் போது, பெண் குழந்தைக்கு 10 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். SSY கணக்கைத் திறக்கும்போது, பெண் குழந்தையின் வயது ஆதாரம் கட்டாயமாகும். ஓராண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதலீடு செய்யலாம்.
அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும். பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம்.
இல்லையெனில் ஆர்பிஐயின் இணையதளத்தில் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/494SSAC110315_A3.pdf இந்த படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இது தவிர பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி, பிஓபி வங்கிகளின் இணையத்திலும் டவுன் லோடு செய்து கொள்ளலாம். இது தவிர தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச் டிஎஃப்சி வங்கி உள்ளிட்டவற்றின் இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அதனை சம்பந்தபட்ட அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது வங்கிகளிலோ கொடுத்து, அதனுடன் சரியான ஆவணங்களையும் இணைத்து இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
சுகன்யா சமிர்தி திட்டத்தில் வரி சலுகைகள்
இந்த திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு 18 வயது நிரம்பியதற்கான சான்று அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அளிக்க வேண்டும்.ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் முதிர்வு
21 ஆண்டுகள் நிறைவடையும் போது SSY திட்டம் முதிர்ச்சியடைகிறது. முதிர்ச்சியடைந்ததும், நிலுவைத் தொகை, கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவருக்கு செலுத்தப்படும். முதிர்ச்சியடைந்த பின்னர் SSY கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகை தொடர்ந்து வட்டி சம்பாதிக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 21 வயது காலம் முடிவதற்குள் பெண் குழந்தை திருமணமானால் கணக்கு தானாகவே மூடப்படும்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"