Tamilnadu Mercantile Bank Limited – Reserve Bank of India Tamil News: தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த வங்கி தற்போது தமிழக அரசு துறை சார்ந்த வணிகத்தை மேற்கொள்ளுவதற்கான அங்கீகாரத்தை இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறியது பின்வருமாறு:-
50 லட்சம் வாடிக்கையாளர்கள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும், அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்கு உரிய சரித்திரம் படைத்து வருகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்த வங்கி இந்தியா முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையாற்றி வருகிறது.
ரிசர்வ் வங்கி அங்கீகாரம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குசந்தையிலும் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதன்பிறகு வங்கி மீண்டும் தனது தொலைநோக்கு திட்டமாக, நாடு முழுவதும் மீண்டும் விரிவாக்க நடவடிக்கைகளிலும், அதன் சேவை திட்டங்களிலும் புதிய பரிமாணங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது பாரத ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை அரசு துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாளுவதற்கான முகவர் வங்கியாக அங்கீகாரம் அளித்துள்ளது. இதனை வங்கியின் அனைத்துநிலை உடைமைதாரர்களுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil