தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகள் அறிமுக நாளான வியாழக்கிழமை மந்தமாக காணப்பட்டது. மேலும் பங்கு விற்பனையில் சரிவும் காணப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் வங்கி தமிழ்நாடு மெர்க்கண்டைல். இந்த வங்கி முதல் பங்கு விற்பனையை அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் (பி.எஸ்.இ) தமிழ்நாடு மெர்க்கண்டைல் பங்குகள் ரூ.510 ஆகவும் தேசிய பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ) ரூ.495 ஆகவும் வியாழக்கிழமை (செப்.15) அறிமுகப்படுத்தப்பட்டன.
பி.எஸ்.இ.,யை பொறுத்தமட்டில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் பங்குகள் அதிகப்பட்சமாக ரூ.519 வரை உயர்ந்து, ரூ.484.50 வரை அதிகப்பட்சமாக குறைந்து, வர்த்தக முடிவில் ரூ.508.45 ஆக நிலைத்தது.
என்.எஸ்.இ.,யில் அதிகப்பட்சமா ரூ.510 வரை சென்று குறைந்தப்பட்சமாக ரூ.486 வரை சரிந்து வர்த்தக முடிவில் ரூ.509.65 ஆக நிறைவு செய்தது.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முதல் பங்கு விற்பனை (ஐபிஓ) மூலம் ரூ.808 கோடி திரட்டியது. இந்த வங்கியின் ஐபிஓ ரூ.500-525 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நாடு முழுக்க 509 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது. இதில் 369 கிளைகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இந்த வங்கியின் என்.பி.ஏ., எனப்படும் செயல்படாத சொத்துகள் (Non Performing Assets) 2020-21ஆம் ஆண்டில் 3.44 சதவீதமாகவும், 2021-22இல் 1.69 சதவீதமாகவும் உள்ளது. நிகர செயல்படாத சொத்துக்கள் (Net NPA 1.98 சதவீதம் மற்றும் 0.95 சதவீதம் ஆக காணப்படுகின்றன.
இந்த நிலையில் வியாழக்கிழமை பேசிய வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் சங்கர சுப்பிரமணியம், “பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வணிகர்களின் வங்கி என்ற நற்பெயருடன் தொடர்ந்து செயல்படும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.