/indian-express-tamil/media/media_files/2025/05/09/oMgPWfD7fVHj5qlrUXge.jpg)
பி.பி.எஃப். டூ ரியல் எஸ்டேட்... ஓய்வு காலத்திற்கு பாதுகாப்பான 6 சிறந்த நீண்டகால முதலீட்டு திட்டங்கள்!
வருங்காலத்தை பாதுகாப்பாக அமைத்துக்கொள்வதற்கு முதலீடு சிறந்த வழி. பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியாக முதலீடு செய்வது அதைவிட முக்கியம். 2025-ல், உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும் சில சிறந்த முதலீட்டு வழிகளைப் பற்றி பார்ப்போம். நீண்டகால முதலீடுகள் உங்கள் செல்வத்தை நிலையாக வளர்ப்பதோடு, வலுவான நிதி பாதுகாப்பிற்கான அடித்தளத்தையும் உருவாக்குகின்றன. ஓய்வூதியம், வீடு வாங்குதல் அல்லது குழந்தைகளின் கல்வித் திட்டங்களுக்குச் சேமிப்பது என எதுவாக இருந்தாலும், சரியான முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
அரசு உத்தரவாதத்துடன் கூடிய முதலீடுகள்
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): நீங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை விரும்பினால், PPF உங்களுக்கு சரியான தேர்வு. இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் இதில் எந்தவித ஆபத்தும் இல்லை. 15 வருட முதிர்வு காலம் கொண்ட இந்தத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு முழுமையான வரி விலக்கு உண்டு.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS): ஓய்வூதியத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தால், NPS உதவும். இதில் முதலீடு செய்யும் பணம் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு, காலப்போக்கில் பல மடங்கு பெருகுகிறது. மேலும், இதில் முதலீடு செய்வதற்கு வரிச் சலுகைகளும் கிடைக்கும்.
அதிக வருமான வாய்ப்புள்ள முதலீடுகள்
பங்கு சார்ந்த பரஸ்பர நிதி (Equity Mutual Funds): நீண்டகாலத்தில் அதிக வருமானம் ஈட்ட விரும்பினால், இது ஒரு சிறந்த வாய்ப்பு. இதில் உள்ள ரிஸ்க் அதிகமாக இருந்தாலும், குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் முதலீடு செய்தால் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறையும், மேலும் கூட்டு வட்டி மூலம் உங்கள் பணம் வேகமாக வளரும்.
யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் (ULIPs): இந்தத் திட்டம் காப்பீடு மற்றும் முதலீடு ஆகிய இரண்டின் பலன்களையும் தருகிறது. நீங்கள் கட்டும் பிரீமியத்தின் ஒரு பகுதி உங்கள் ஆயுள் காப்பீட்டிற்குச் செல்லும். மீதிப் பணம் உங்கள் விருப்பத்திற்கேற்ப பங்கு அல்லது கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். ஐந்து வருட லாக்-இன் பீரியட் இருப்பதால், இது நீண்டகால வளர்ச்சிக்கு ஏற்றது.
ரியல் எஸ்டேட்: அதிக ஆரம்ப முதலீடு தேவைப்படும் என்றாலும், ரியல் எஸ்டேட் ஒரு திடமான முதலீடாகக் கருதப்படுகிறது. சரியான இடத்தில் சொத்து வாங்கி நீண்டகாலம் வைத்திருந்தால், அதன் மதிப்பு பல மடங்கு உயரும். மேலும், அதன் மூலம் வாடகை வருமானத்தையும் பெறலாம்.
நேரடிப் பங்குகள் (Stocks): சந்தையைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு, நேரடியாக நல்ல தரமான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது நல்ல லாபத்தைத் தரும். பங்குகளை நீண்டகாலம் வைத்திருந்தால், பெரிய அளவில் செல்வத்தை உருவாக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் நிதி இலக்குகளைப் பொறுத்தது. எனவே, உங்கள் எதிர்காலத்திற்காக இப்போதே திட்டமிட்டு, சரியான திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். உங்கள் பணம் நிச்சயம் வளரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.