/indian-express-tamil/media/media_files/2025/05/29/122ysU9Bcsdret4Pn73W.jpg)
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாலும், உக்ரைன்-ரஷ்யா போரின் போது இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கியதாலும், அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% வரிவிதித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு, ஆகஸ்ட் 27, 2025 அன்று, நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP) தெரிவித்துள்ளது.
வரிவிதிப்புக்கான காரணம்:
இந்த வரிவிதிப்புக்கான சட்டபூர்வமான அதிகாரம், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) போன்ற சட்டங்களிலிருந்து பெறப்பட்டது என்று சிபிபி(CBP) குறிப்பிட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் செயல்பாடுகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதால், ரஷ்யாவிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதே இந்த கூடுதல் வரிவிதிப்புக்குக் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாதிப்புக்கு உள்ளாகும் துறைகள்:
வைரங்கள் மற்றும் நகைகள்: வைரம் பட்டை தீட்டுதல் மற்றும் நகை தயாரிப்புத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஜவுளி மற்றும் ஆடைகள்: வீட்டு உபயோக ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் (RMG) ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்படலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
பிற துறைகள்: இறால், கம்பளங்கள், இரசாயனங்கள், வேளாண் இரசாயனங்கள், மூலதனப் பொருட்கள் மற்றும் சோலார் பேனல் தயாரிப்பு போன்ற துறைகளிலும் கணிசமான பாதிப்பு ஏற்படும் என்று வர்த்தக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வரி விதிப்பால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அமெரிக்க சந்தையில் போட்டியிடுவது கடினமாகி, வர்த்தகம் லாபமற்றதாக மாறும் என வர்த்தகத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:
அதே சமயம், இந்த புதிய வரிவிதிப்பிலிருந்து சில முக்கியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பயணிகள் வாகனங்கள், இரும்பு மற்றும் எஃகு, மற்றும் தாமிரப் பொருட்கள் ஆகியவை அடங்கும். ஏற்கெனவே இந்த பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்த புதிய வரிவிதிப்பிலிருந்து அவை விலக்கப்பட்டுள்ளன. மருந்துகள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பின் தாக்கம், ஒவ்வொரு நிறுவனத்தின் ஏற்றுமதி அளவு, அதிகரித்த செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கும் திறன், மற்றும் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது ஏற்படும் இழப்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அமெரிக்காவின் தேவைகள் குறைந்து, உலகளாவிய வர்த்தக சமன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.