Income Tax Budget 2025 Announcements Highlights: 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்திருக்கும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.
இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதாவது, மாதம் ரூ. 1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசின் வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ 2,600 கோடியும் அரசுக்கு இழப்பு நேரிடும் என்றும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுக்கப்படுகிறது. வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது. கூடுதலாக ரூ. 75 ஆயிரம் கழிவும் வழங்கப்படும். வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக அரசுக்கான வரி வருவாய் குறையும். நேரடி வரிகளில் ரூ.1 லட்சம் கோடி, மறைமுக வரிகளில் ரூ.2,600 கோடி குறையும்." என்று அவர் தெரிவித்தார்.
புதிய வரி முறை அறிவிப்பு
ரூ 0-4 லட்சம்வரை - வருமான வரி இல்லை
ரூ 4 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை 5% வருமான வரி
ரூ 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை 10% வருமான வரி
ரூ 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை 20% வருமான வரி
ரூ 20 லட்சம் முதல் 24 லட்சம் வரை 25% வருமான வரி
24 லட்சத்திற்கு மேல் 30% வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.