/indian-express-tamil/media/media_files/2025/08/18/aviation-fuel-2025-08-18-09-38-25.jpg)
இந்த ஆண்டு இறுதியில் உற்பத்தி தொடங்கும் என ஐ.ஓ.சி தலைவர் அர்விந்தர் சிங் சாஹ்னி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி), அதன் பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பயன்படுத்திய சமையல் எண்ணெயில் இருந்து நிலையான விமான எரிபொருள் (எஸ்.ஏ.எஃப்) வணிக ரீதியாக உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் உற்பத்தி தொடங்கும் என ஐ.ஓ.சி தலைவர் அர்விந்தர் சிங் சாஹ்னி தெரிவித்துள்ளார்.
பெரிய ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஹல்திராம்ஸ் போன்ற இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிக்கப்படும். பொதுவாக, இவை ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள், ஐ.ஓ.சி நிறுவனம் ஆண்டுக்கு 35,000 டன் எஸ்.ஏ.எஃப் உற்பத்தி செய்யும் திறனைப் பெறும்.
சாஹ்னி கூறுகையில், “இந்தத் திறன் (ஆண்டுக்கு 35,000 டன்) 2027-க்குள் இந்தியாவின் 1% எஸ்.ஏ.எஃப் கலப்புத் தேவையை (சர்வதேச விமானங்களுக்கானது) பூர்த்தி செய்ய போதுமானது. பெரிய ஹோட்டல் தொடர்புகளிலிருந்து பயன்படுத்திய சமையல் எண்ணெயைச் சேகரிப்பது எளிது, ஆனால், சிறிய பயனர்கள் மற்றும் வீடுகளில் இருந்து சேகரிப்பதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்” என்று கூறினார்.
சமீபத்தில், ஹரியானாவில் உள்ள தனது பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தில் எஸ்.ஏ.எஃப் உற்பத்தி செய்வதற்கான ஐ.எஸ்.சி.சி சி.ஓ.ஆர்.எஸ்.ஐ.ஏ (ISCC CORSIA) சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் நிறுவனம் ஐ.ஓ.சி ஆகும். இந்த சான்றிதழ் எஸ்.ஏ.எஃப் வணிக உற்பத்திக்கு ஒரு முன்நிபந்தனையாகும்.
எஸ்.ஏ.எஃப் என்பது ஒரு உயிரி எரிபொருள் ஆகும். இது நிலையான மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டு, வழக்கமான விமான எரிபொருளுக்கு (ஏ.டி.எஃப்) ஒத்த வேதியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பொருள், தற்போதுள்ள விமான எஞ்சின்கள் எஸ்.ஏ.எஃப் - ஏ.டி.எஃப் கலவையை எளிதாகப் பயன்படுத்த முடியும். ஏர்பஸ் நிறுவனம் அதன் அனைத்து விமானங்களும் அதிகபட்சம் 50% எஸ்.ஏ.எஃப் மற்றும் வழக்கமான எரிபொருள் கலவையில் பறக்கும் திறன் கொண்டவை என்று கூறுகிறது. எஸ்.ஏ.எஃப், உலகளாவிய விமானத் துறையின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் 60% பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவில் ஏற்கனவே எஸ்.ஏ.எஃப் கலப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பிய விமான நிறுவனங்கள் ஐ.ஓ.சி-ன் எஸ்.ஏ.எஃப்-ன் முதல் வாங்குபவர்களாக இருக்கலாம் என்றும், அவை இந்தியாவிற்கு வரும்போது அதை வாங்கலாம் என்றும் சாஹ்னி தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் உலக அளவில் எஸ்.ஏ.எஃப் தேவை அதிகரிக்கும் என்பதால், ஏற்றுமதி வாய்ப்புகளையும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
2027-ம் ஆண்டு சி.ஓ.ஆர்.எஸ்.ஐ.ஏ-ன் கட்டாய கட்டம் தொடங்குவதால், எஸ்.ஏ.எஃப் பயன்பாட்டிற்கு முக்கியமான ஆண்டாக அமையும். இது சர்வதேச விமானங்களுக்குப் பொருந்தும். 2020 நிலைகளுக்கு அப்பால் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் ஏற்படும் எந்த வளர்ச்சியையும் ஈடுகட்ட விமான நிறுவனங்களுக்கு இது தேவைப்படும். எஸ்.ஏ.எஃப் உடன் ஜெட் எரிபொருளைக் கலப்பது, விமான நிறுவனங்கள் தங்கள் உமிழ்வை அனுமதிக்கப்பட்ட அளவுகளுக்குள் வைத்திருக்க உதவும் ஒரு வழியாகும்.
ஓ.ஆர்.எஸ்.ஐ.ஏ கட்டமைப்புக்கு இணங்க, 2027 முதல் சர்வதேச விமானங்களுக்காக ஜெட் எரிபொருளுடன் எஸ்.ஏ.எஃப்-ஐக் கலப்பதற்கான ஆரம்ப இலக்குகளை இந்தியாவின் தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு (NBCC) நிர்ணயித்துள்ளது. இந்த இலக்குகள்: 2027-ல் 1% மற்றும் 2028-ல் 2% கலப்பு ஆகும். உள்நாட்டு விமானங்களுக்கான எஸ்.ஏ.எஃப் கலப்பு கட்டாயத்தை 2027 அல்லது அதற்குப் பிறகு அறிவிக்க அரசு எதிர்பார்க்கிறது.
தற்போது எஸ்.ஏ.எஃப் உற்பத்தி செலவு வழக்கமான ஜெட் எரிபொருளின் விலையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, விமான நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக, அரசு இத்தகைய கட்டாயத்தை 2027 அல்லது அதற்குப் பிறகு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஐ.ஓ.சி நிறுவனம் பயன்படுத்திய சமையல் எண்ணெய் மூலம் எஸ்.ஏ.எஃப் தயாரிப்பதற்கான சான்றிதழைப் பெற்றிருந்தாலும், எத்தனாலை மூலப்பொருளாகப் பயன்படுத்தி எஸ்.ஏ.எஃப் தயாரிக்கும் "ஆல்கஹால்-டு-ஜெட்" முறையிலும் அலகுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிற இந்திய நிறுவனங்களும் பல்வேறு எஸ்.ஏ.எஃப் உற்பத்தி முறைகளில் வணிக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு அனைத்து தொழில்நுட்ப அலகுகளை நிறுவ முயற்சி செய்து வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.