தமிழகம் முழுவதும் வணிகவரித்துறையினர் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற அடிப்படையில் வணிகர்களை அச்சுறுத்துவதாகவும் அதனை கண்டித்து செவ்வாய்க்கிழமை (நவ.29) தமிழக முழுவதும் வணிகவரி துறையின் அதிகாரிகளிடம் வணிகர் சங்கத்தினர் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணிகவரித்துறையினர் அண்மைக்காலமாக டெஸ்ட் பர்சேஸ் என்ற முறையினை அமல்படுத்தி வருகின்றனர்.
இந்த முறைப்படி வணிகர்கள் யாரும் முறையாக வரி செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டி வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வணிகவரித்துறை அதிகாரிகள் வசூலித்து வருகின்றனர்.
டெஸ்ட் பர்சேஸ் திட்டம் அதிகாரிகளின் லஞ்ச ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டமாக இருக்கின்றது. எனவே இந்தத் திட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை தமிழக முழுவதும் மாவட்ட அளவிலான வணிக வரி உயர் அதிகாரிகளிடம் மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனடிப்படையில் நாளை காலை திருச்சி நீதிமன்றம் பின்புறம் அமைந்துள்ள திருச்சி கோட்ட வணிகவரி இணை ஆணையர் அலுவலகத்தில் தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு கோரிக்கை மனு கொடுக்க உள்ளார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பேரமைப்பின் மண்டல தலைவர், திருச்சி மாவட்ட தலைவர், துணைத்தலைவர், மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணிகள், வணிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil