தொழிலாளர்கள் வைப்பு நிதி சம்பளம் வாங்கும் ஊழியர்களின் மிக முக்கியமான சேமிப்பு தொகையாகும். பொதுவாக பெரும்பாலான ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் 12% பணத்தை பி.எஃப். சேமிப்பாக வழங்குகிறார்கள். எனினும், கூடுதல் வட்டிக்கு முதலீடு செய்ய வேண்டுமென விரும்பினால் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF - Voluntary Provident Fund) ஒரு நல்ல சாய்ஸ். உங்கள் PF அக்கவுண்டில் இருந்து 12 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தொகையை VPFஇல் முதலீடு செய்யலாம்.
பிஎஃப் போலவே, விபிஎஃப்-இல் முதலீடு செய்துள்ள தொகையும் தானாகவே சம்பள தொகையிலிருந்து கழிக்கப்படும். மேலும், விபிஎஃப்-இல் முதலீடு செய்யும் தொகையை ஆண்டுதோறும் சம்பந்தப்பட்ட நபர் புதுப்பிக்க வேண்டும்.
நிதியாண்டின் தொடக்கத்தில், VPF பங்களிப்பு தொகையை உறுதிப்படுத்த வேண்டும்.
சேமிப்பு திட்டத்தில் பிஎஃப் போல விபிஎஃப்-லும் வட்டி தொகை கிடைக்கிறது. இரண்டு திட்டத்தின் வட்டி விகிதமும் 8.5 சதவிகிதம் ஆகும். இது எஃப்டி உள்ளிட்ட அனைத்து வங்கி சேமிப்பு திட்டங்களையும் காட்டிலும் அதிகமாகும்.
சில நேரங்களில், ஊழியர்கள் மியூச்சுவல் ஃபண்டுகள், ஈக்விட்டி சந்தைகளில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் நல்ல லாபம் பெற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உங்களது லாபம், சந்தை மதிப்பை பொறுத்து தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். VPF பாதுகாப்பான சேமிப்பு திட்டமாகும்.
PF போலவே VPF திட்டங்களுக்கும் வரிச் சலுகைகள் உண்டு. முதலீட்டின்போதும், பணம் சேரும்போதும், பணம் எடுக்கும்போதும் வரி விதிக்கப்படாது. தற்பேதைய விதிகளின்படி, ஆண்டிற்கு ரூபாய் 1.50 லட்சம் வரை ஊழியர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. அதன்மூலம், வரியில் 46,800 ரூபாய் சேமிக்கப்படுகிறது. ஒருவேளை, அடுத்த நிதியாண்டில் சம்பள உயர்வு அல்லது வருமானம் அதிகமானல், விபிஎஃபி-ஐ தேர்வு செய்யலாம். ஏனெனில் அது, வரி இல்லாத, உறுதியான முதலீட்டு வாய்ப்பாகும்.
நீங்கள் 2 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கும்போதோ அல்லது உங்கள் ஓய்விற்குப் பிறகோ உங்கள் VPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். மேலும், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலையை மாற்றும்போது, உங்கள் EPF போலவே, நீங்கள் VPF கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.
மேலும், சமீபத்தில் பிஎஃப் முதலீட்டில் வரி விலக்கின் உச்ச வரம்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றியமைத்துள்ளார். பிஎஃப் முதலீட்டில் ரூபாய் 2.50 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு கிடையாது. அதற்கு மேலான தொகைக்கு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் முதலீட்டு தொகையில், வரி வசூலித்தால் பிரச்னை இல்லை என கருதுபவர்களுக்கு, விபிஎஃப் சிறந்த தேர்வாகும். ஏனெனில், அதில் கூடுதல் வட்டியை பெறமுடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil