/indian-express-tamil/media/media_files/2025/10/07/alexandr-wang-2025-10-07-09-33-25.jpg)
யார் இந்த அலெக்ஸாண்டர் வாங்? மெட்டாவின் ஏ.ஐ. புரட்சிக்கு மார்க் ரூ.1.24 லட்சம் கோடி செலவழித்தது இவருக்காகத்தான்!
பெரிய டெக் நிறுவனங்கள் ஏ.ஐ. பந்தயத்தில் முன்னணியில் இருக்க முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றன. மெட்டா, மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஏ.ஐ. குழுக்களுக்கு சிறந்த நிபுணர்களை பணியமர்த்த தீவிரமாக முயல்கின்றன. இந்த விவகாரத்தில், மெட்டாதான் துரிதமாக செயல்பட்டு, அலெக்ஸாண்டர் வாங்-கை தனது புதிய தலைமை ஏ.ஐ. அதிகாரியாக (Chief AI Officer) நியமித்திருக்கிறது.
மெட்டா தனது சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் நோக்கில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அலெக்ஸாண்டரை பணியமர்த்தியது. மார்க் ஜுக்கர்பெர்க், அலெக்ஸாண்டரை மெட்டாவின் ஒட்டுமொத்த ஏ.ஐ. செயல்பாட்டிற்கும் தலைவராக்கி, அவரது ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் $14.3 பில்லியன் என்ற பிரமிக்க வைக்கும் முதலீட்டையும் செய்தார். வாங் இப்போது மெட்டாவின் சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்திற்காக, துறையின் சிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவிற்கு தலைமை தாங்குகிறார். மேலும், மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் லேப்ஸ் (Meta Superintelligence Labs) என்ற புதிய அமைப்பின் கீழ், மெட்டாவின் மற்ற ஏ.ஐ. தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி குழுக்களையும் அவர் மேற்பார்வையிடுகிறார்.
அலெக்ஸாண்டர் வாங், 2016-ல் தனது 19 வயதில் 'Scale AI' என்ற ஏ.ஐ. ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அவர் தனது நண்பர் லூசி குவோவுடன் இணைந்து ஸ்கேலர் ஏ.ஐ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தினார். அவர்கள் ஸ்டார்ட்அப் ஆக்சிலரேட்டர் திட்டத்தில் இணைந்து, ஏர் மெத்தைகளில் தூங்கி, தங்கள் ஸ்கேலர் ஏ.ஐ. கனவை நனவாக்கக் கடினமாக உழைத்தனர். ஸ்கேலர் ஏ.ஐ. விரைவில் தொழில்நுட்பத் துறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பெரிய டெக் நிறுவனங்களே தங்கள் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிலையை உருவாக்கியது.
பணிநியமனம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே, வாங் மெட்டா ஏ.ஐ. குழுவை 4 தனித்தனி குழுக்களாக பிரித்து மறுசீரமைக்க தொடங்கி விட்டார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை ஏ.ஐ. அதிகாரி மற்றும் முன்னாள் Scale AI CEO-வான அலெக்ஸாண்டர் வாங் அனுப்பிய குறிப்பில், நீண்ட கால இலக்கை அடைய நிறுவனம் கூர்மையான கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது குறிப்பில், “சூப்பர் இன்டலிஜென்ஸ் வருகிறது. அதை தீவிரமாக அணுகுவதற்கு, அடைவதற்கு முக்கியமான பகுதிகளான ஆராய்ச்சி, தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மையப்படுத்தி நாம் அணிதிரள வேண்டும்,” என்று எழுதியுள்ளார்.
சீனக் குடியேறிய இயற்பியலாளர்களுக்கு மகனாக நியூ மெக்சிகோவில் பிறந்த வாங், எம்.ஐ.டி. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு Scale நிறுவனத்தைத் தொடங்கினார். தனது 20-களிலேயே அவர் பில்லியனர் ஆனார். அவர் சிலிக்கான் வேலி மற்றும் வாஷிங்டன் டி.சி.யில், OpenAI-யின் சாம் ஆல்ட்மேன் மற்றும் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருடன் வலுவான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.
2016-ல் நிறுவப்பட்ட Scale ஏ.ஐ, மேம்பட்ட ஏ.ஐ அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான பெரிய அளவிலான லேபிளிடப்பட்ட தரவுகளை வழங்குகிறது. இதற்கு அது Rotasks மற்றும் Outlier போன்ற தளங்கள் மூலம் கிக் ஊழியர்களை (gig workers) நிர்வகிக்கிறது. மே 2024 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் மதிப்பு கிட்டத்தட்ட $14 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.24 லட்சம் கோடி) ஆகும். இதில் Nvidia, Amazon, மற்றும் மெட்டா உள்ளிட்டோர் முதலீடு செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.