அமெரிக்க பருத்தியை பயன்படுத்தி இந்திய ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.
சர்வதேச பருத்தி கவுன்சில் (சி.சி.ஐ), அமெரிக்காவின் தேசிய பருத்தி கவுன்சிலின் (என்.சி.சி) ஏற்றுமதி ஊக்குவிப்பு பிரிவாகும். இந்த கவுன்சில் உலகம் முழுவதும் 20 அலுவலகங்களுடன் 50"க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சர்வதேச பருத்தி கவுன்சில் கோவையில் அதன் வருடாந்திர பருத்தி தினத்தை இந்த வாரம் நடத்தியது. இதில் அமெரிக்க பருத்தியை பயன்படுத்தி இந்திய ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சர்வதேச பருத்தில் கவுன்சில் சார்பில் அதன் பிரதிநிதி பியூஷ் நரங், தெற்காசியாவிற்கான சி.சி.ஐ இயக்குனர் வில் பெட்டன்டோர்ப், சுபிமா தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் லெவ்கோவிட்ஸ், ஆகியோர் உரையாற்றினர்.
உலகளாவிய பருத்தி நுகர்வில் இந்தியாவின் முக்கிய பங்கு, உலகளாவிய மற்றும் இந்திய ஜவுளித் துறைகளில் அமெரிக்க பருத்தியின் போக்கு பற்றி விரிவாக கூறினர்.
அமெரிக்க பருத்தி துறையானது இந்திய ஜவுளி ஆலைகளின் சாதுர்யமிக்க செயல்பாடுகளுடன் இணைந்து இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி சந்தைகளுக்கு ஒரு சிறந்த, நிலையான மற்றும் உயர்தர உற்பத்தியை அளிக்கிறது என்று தெரிவித்தனர்.
மேலும் நார் பொருட்கள் உற்பத்தியில் அமெரிக்க தொழில்துறை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறது. டிரஸ்ட் புரோட்டோகால் மற்றும் சுபிமா ஆகியவை இணைந்து விநியோகச் சங்கிலி மற்றும் பண்ணை-நிலை, அறிவியல் அடிப்படையிலான தரவுகளுக்கான சேவைகளை வழங்குதில் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.
ஆடை மற்றும் வீட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் ஜவுளித் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பரந்த அளவிலான பருத்தி உற்பத்தி இருந்தாலும், அமெரிக்க பருத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதுபோன்ற நேரடி சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை தொடர்ந்து வலிமைப்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.