தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டதை விட முன்னதாக வெளியிடப்பட உள்ளன.
அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எதிர்வரும் மே 16ஆம் தேதி காலை 9 மணி அளவில் வெளியிடப்படும். முன்னதாக, இந்த முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் மே 16ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்ற இந்த தேர்வுகளின் முடிவுகள் தற்போது முன்கூட்டியே வெளியாக இருப்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://resultsdigilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
கூடுதலாக, பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் கைப்பேசி எண்களுக்கும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கும்போது அளித்த கைப்பேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.