/tamil-ie/media/media_files/uploads/2021/10/jobs-759-4.jpg)
கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அடுத்தகட்டமாக வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்புத் துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in ல் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வசதிகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து பேசிய தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ், " 2020-2021ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 4ம் தேதி(இன்று) முதல் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து இன்று முதல் வருகிற 18ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் அதிகளவில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். எனவே, மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.