2021-22 கல்வியாண்டில் பி.இ, பிடெக் பாடப்பிரிவில் உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கு, 440 பொறியியல் கல்லூரிகள் மூலம் மாணவர் சேர்க்கையைத் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
முதற்கட்டமாகச் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரவுள்ள அரசு பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், அரசுப் பள்ளியில் படித்த விளையாட்டு வீரர்கள், தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பொதுப்பிரிவுனருக்கு நான்கு ரவுண்டில் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாகத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 200 முதல் 186 வரை கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 14,788 மாணவர்கள் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் 30 வரை நடைபெறவள்ள முதல் சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்கவுள்ளனர்.
அதேபோல், கட்ஆஃப் மார்க்கில் 185.9 முதல் 174 வரை பெற்ற 45,227 மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து,173.9 முதல் 160க்குள் கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 5 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கவுன்சிலிங்கில் பங்கேற்கவுள்ளனர். அவர்களுடன் கூடுதலாக, 159.9 கட்ஆஃப் மார்க் அல்லது அதற்கு குறைவாக பெற்ற மாணவர்களும் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு பொறியியல் படிப்பில் சேரவிரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால், கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதனால், அதிகப்படியான மாணவர்கள் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மார்க் பெற்றனர்.
பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்தி வந்தது. ஆனால், 2019இல் , பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் உயர் கல்வித் துறையுடன் ஏற்பட்டதன் தகராறு காரணமாக, கலந்தாய்வை நடத்திட மறுப்பு தெரிவித்தது. அன்று முதல், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் பொறியியல் கவுன்சிலிங்கை நடத்தி வருகிறது.
