ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சலிங் முடிவடையும் நிலையில் இந்தாண்டும் 57,000க்கும் அதிகமான
இடங்கள் காலியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் படிக்க அரசு நடத்தும் பொறியியல் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து படிக்கலாம். 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன் படி இந்தாண்டு 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்றது. கடந்த ஜூலை மாத இறுதியில் சிறப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதையடுத்து ரேண்டம் எண் அடிப்படையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 2 சுற்றி கலந்தாய்வு முடிவடைந்து மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு கடந்த வாரம் நடைபெற்றது. மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வில் 89,396 மாணவர்கள் பங்கேற்ற நிலையில் 37,508 மாணவர்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்லூரிகள் ஒதுக்கப்பட்டது. இந்த மாணவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும். மூன்று சுற்று கலந்தாய்வில் மொத்தம் 1,01,794 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 440 பொறியியல் கல்லூரிகளில் 1.6 லட்சம் இடங்களுக்கு 1.7 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் ஆன்லைன் கவுன்சலிங் செப்டம்பர் 3-ம் தேதி முடிவடையும் நிலையில், துணை கவுன்சலிங் செப்டம்பர் 6 முதல் 8 வரை நடைபெறுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 11-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என கல்வியலாளர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil