செப்டம்பர் மாத இறுதிக்குள் நடக்கும் இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளுக்கு, ஏதோவொரு காரணத்தால் எழுத முடியாமல் போனால், அந்தப் படிப்பு / தேர்வுத்தாளை பல்கலைக்கழகம் நடத்துகின்ற சிறப்புத் தேர்வின் போது எழுதுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டது. அதில், அனைத்து பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் இறுதிக்குள் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டது.
மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் யுஜிசி- யின் இந்த வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் செப்டம்பருக்குள் இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகள் நடத்தப்படாது என்ற உத்தரவை பிறப்பித்தன.
மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களின் இத்தகைய செயல் யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் முரணானது என்று யுஜிசி தெரிவித்தது. தனது பதில் மனுவில், “யுஜி / பிஜி மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்துசெய்வது / இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தமால் பட்டங்களை வழங்குவது யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் முரணானது" என்று தெரிவித்தது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
அனைத்து பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் இறுதிக்குள் இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்த கடமைப்பட்டுள்ளன என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
முன்னதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தனது ட்விட்டரில், " எந்தவொரு கல்வி அமைப்பிலும் மாணவர்கள் கற்றுக் கொண்டதை மதிப்பீடு செய்வது என்பது மிக மிக முக்கியமான மைல் கல்லாகும். தேர்வில் வெற்றி பெறுவது என்பது மாணவர்களுக்கு நம்பிக்கையையும் திருப்தியையும் அளிக்கிறது. சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்வதற்குத் தேவையான தகுதிறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை தேர்வு முடிவுகள் தான் தருகின்றன" என்று தெரிவித்தார்.
யுஜிசி-யின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி கோவிட் பாதிப்புக்குள்ளான மாணவர் உட்பட மாணவர்கள் குழு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. யுஜிசி-யின் வழிமுறைகள்,"எந்த நபரின் வாழ்க்கையையோ அல்லது தனி நபர் சுதந்திரத்தையோ சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர பிற வழிகளில் மீறப் படக் கூடாது என்ற அரசியலமிப்பின் பிரிவு 21க்கு எதிரானது"என்று மாணவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil