தனியார் பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 92 பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்தநிலையில் தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் குறைப்பாடுகள் இருக்கிறது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: உதவிப் பேராசிரியர் பணிக்கு நெட், செட், ஸ்லெட் கட்டாயம்; யு.ஜி.சி உறுதி
அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை தனியார் கல்லூரிகள் பூர்த்தி செய்ய வேண்டும், மேலும் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். தன்னாட்சி அங்கீகாரம் பெற கல்லூரிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில், முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில் 70 சதவீத மாணவர் சேர்க்கை இருப்பது அவசியம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனத்தின் தரக்குறியீடு 10-ல் இருந்து 20-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு தேர்ச்சி விகிதம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் எனவும், விரிவுரையாளர்களின் சராசரி பணி அனுபவம் 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் ஆசிரியர் – மாணவர் விகிதம் 1:20 ஆக இருக்க வேண்டும். 75% இளங்கலை படிப்புகளில் பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர்கள் விகிதம் 1:2:6 ஆக இருக்க வேண்டும்.
புதிய துறைகள் தொடங்க வேண்டும் எனில் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற வேண்டும். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாத தன்னாட்சி கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய புதிய விதிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil