மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற உதவும் வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் எதிர்மறை மதிப்பெண்ணைக் குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (TANCET) நடத்துகிறது. மேலும், ME, MTech, MPlan, M.Arch படிப்புகளுக்கு CEETA என்ற தனி நுழைவுத் தேர்வை பல்கலைக்கழகம் நடத்துகிறது. முன்னதாக, ஒரே தேர்வாக நடைபெற்று வந்த நிலையில், முதுகலை சேர்க்கையை முன்னெடுத்துச் செல்லவும், காலி இடங்களைத் தவிர்க்கவும், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் ME, MTech, MPlan, M.Arch படிப்புகளுக்கு CEETA என்ற தனி நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது.
இந்த முதுகலை நுழைவுத் தேர்வுகளில் 100 பல தேர்வு அடிப்படையிலான கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு கேள்வியும் சரியாக இருந்தால் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு இரண்டு மணி நேரம் நடக்கும். இந்த டான்செட் தேர்வில் மூன்று தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். அதாவது நுழைவுத் தேர்வில் தவறான பதிலுக்கு .33 எதிர்மறை மதிப்பெண் கிடைத்தது.
இந்தநிலையில், மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற உதவும் வகையில், நான்கு தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
"டான்செட் அதிக நெகட்டிவ் மதிப்பெண்களைக் கொண்டிருந்தது. ஐ.ஐ.டி.,கள் கூட நான்கு தவறான பதில்களுக்கு ஒரு எதிர்மறை மதிப்பெண்ணை வழங்குகின்றன" என்று TANCET இன் செயலாளர் பேராசிரியர் டி ஸ்ரீதரன் கூறினார் என TOI செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்வு அட்டவணையையும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. TANCET-MCA மார்ச் 9 அன்று காலையிலும், TANCET-MBA மார்ச் 9 அன்று பிற்பகிலும் நடத்தப்படும். CEETA-PG மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும். தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 7 ஆம் தேதி. கடந்த ஆண்டு, TANCET மற்றும் CEETA ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சுமார் 39,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மார்ச் இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுவோம் என்று ஸ்ரீதரன் கூறினார். பல்கலைக்கழகம் ME, MTech, MPlan, M.Arch சேர்க்கையை மே மாதம் நடத்த வாய்ப்புள்ளது.
"கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதுகலை சேர்க்கையை நாங்கள் முன்னெடுத்த பிறகு, முதுகலை சேர்க்கை அதிகரித்ததைக் கண்டோம். இந்த ஆண்டும் அதே போக்கை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று ஒரு அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“