பொறியியல் கல்லூரிகளில் உரிய கல்வித் தகுதியுடன் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படி, பி.இ. பி.டெக். மாணவர்களுக்கு முதல் பருவத்தில் தமிழர் மரபு, 2-ம் பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த பாடத்தினை, தமிழ் பட்டம் பெற்றவர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்தை பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள் மூலம் நடத்தி வருவதாக புகார் வருகின்றன.
இதுதொடர்பாக இணைப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) பி.சக்திவேல் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்ணாப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பொறியியல் மாணவர்களுக்கு முதல் பருவத்தில் தமிழர் மரபு, இரண்டாம் பருவத்தில் தமிழரும் தொழில் நுட்பமும் ஆகிய பாடங்கள் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திட்டத்தின் படி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பாடங்களை முறையாக நடத்த, தகுதியுடைய தமிழாசிரியர்களை, ஏற்கனவே கல்லூரிகளில் நியமனம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு நியமிக்காமலிருந்தால் உடனடியாக அவர்களை நியமிக்க வேண்டியது இன்றியமையாத கடமையாகும்.
அத்தகைய ஆசிரியர்கள் கல்வித்தகுதி குறைந்தது ஏம்ஏ., எம்பில்., தேசிய தகுதித் தேர்வு, மாநில அளவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு மேல் கல்வித் தகுதி உடையவர்களையும் ஆசிரியர்களாக நியமிப்பது வரவேற்கதக்கது.
கல்லூரியில் தமிழ் ஆசிரியர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர், கல்வித்தகுதி, நியமனம் செய்யப்பட்ட நாள் முதலிய விபரங்கள் அடங்கிய தகவலை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுலவத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் புதியதாக நியமனம் செய்ய வேண்டியிருந்தால் அவர்களை நியமனம் செய்த பின்னர் அது குறித்த விபரத்தையும் ஜூன் 12 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், என அதில் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.