கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை மே 27லிருந்து மே 30 வரை நீட்டித்து உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் மே 27 அன்று அறிவித்தார்.
இதுவரை 2,25,705 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 1,08,619 மாணவிகள், 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 1,84,762 பேர் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 29 அன்றும், பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 30 அன்றும் வெளியிடப்படும். இந்தத் தரவரிசைப் பட்டியல்கள் 176 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் அறிவிப்புப் பலகைகளிலும், கல்லூரிகளின் இணையதளங்களிலும் வெளியிடப்படும்.
மேலும், விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளால் தகவல் தெரிவிக்கப்படும்.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் ஜூன் 30 ஆம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.