Atal Ranking 2020 : அடல் தரவரிசை அமைப்புகளின் முடிவுகளை (Atal Ranking of Institutions on Innovation Achievements – ARIIA 2020) இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
அடல் தரவரிசை தர நிர்ணயம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சியாகும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) மற்றும் மத்திய அரசின் அமைச்சகத்தின் புதுமைப் பிரிவும் ( Ministry’s Innovation Cell) இணைந்து இதனைச் செயல்படுத்துகின்றன.
அடல் தரவரிசை முடிவு 2020, 6 பிரிவுகளைக் கொண்டிருக்கும் -
1) MHRD நிதியளிக்கும் நிறுவனங்கள்
2) மாநில அரசு நிதியளிக்கும் பல்கலைக்கழகங்கள்
3) அரசு நிதியளிக்கும் தன்னாட்சி நிறுவனங்கள்
4) தனியார் / கருதப்படும் பல்கலைக்கழகங்கள்
5) தனியார் நிறுவனங்கள்,
6) பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனங்கள்
பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில், கோவையைச் சேர்ந்த அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் முதலிடத்தைப் பெற்றது. டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்பக் கல்வி, இரண்டாவது இடத்தைப் பெற்றது. இந்த ஆண்டு, இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றன.
தேசிய முக்கிய நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில். சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பெற்றது.
1: ஐ.ஐ.டி-மெட்ராஸ்
2: ஐ.ஐ.டி-பம்பாய்
3: ஐ.ஐ.டி-டெல்லி
4: ஐ.ஐ.எஸ்.சி, கர்நாட்கா
5: ஐ.ஐ.டி-கரக்பூர்
6: ஐ.ஐ.டி-கான்பூர்
7: ஐ.ஐ.டி-மண்டி
8: என்.ஐ.டி-காலிகட்
9: ஐ.ஐ.டி-ரூர்கி
10: ஹைதராபாத் பல்கலைக்கழகம்
இந்தியாவிலுள்ள கல்வி அமைப்புகளையும், பல்கலைக்கழகங்களையும் புதுமை; ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே புதிதாகத் தொழில் தொடங்குவோரை ஊக்குவித்தல், தொழில்முனைவோர் மேம்பாடு போன்ற குறியீட்டு அம்சங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
முதன் முதலாக, அடல் தரவரிசைப் பட்டியலை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டது. கடந்த ஆண்டு வெறும் 496 கல்வி நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெற்ற நிலையில், இந்த ஆண்டு 674 கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் பங்கு பெற்றன.
முன்னதாக ‘’ இந்தியா தரவரிசை 2020’’ என்னும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை (NIRF ranking) மத்திய அரசு வெளியிட்டது. இதில், ஒட்டுமொத்தத் தரவரிசையிலும், பொறியியல் கல்வியிலும் ஐஐடி சென்னை முதலிடத்தை தக்கவைத்தது. உயர் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல், கற்றல், ஆதாரங்கள், ஆராய்ச்சி, தொழில்முறைப் பயிற்சி, பட்ட முடிவுகள் போன்ற அனைத்து முக்கிய அம்சங்கள் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற அறிவிப்பு விழாவில், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்; மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சஞ்சய் ஷாம் ராவ் தோத்ரே ஆகியோர் பங்கேற்றனர். இந்த மெய்நிகர் விழாவில், உயர் கல்வித்துறைச் செயலர் திரு.அமித் காரே; அரசுத்துறை, அரசு சாரா அமைப்புகள், உயர்கல்வி அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil