டி.என்.பி.எஸ்.சி சிலபஸூக்கு வெளியே கேள்விகள்; குரூப் 4 தேர்வை ரத்து செய்க – அண்ணாமலை

லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதிய குரூப் 4 தேர்வில் வினாக்கள் முறையாக இல்லை. மேலும் விடைத்தாள் பாதுகாக்கப்பட்ட விதமும் முறையாக இல்லை – பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை

லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதிய குரூப் 4 தேர்வில் வினாக்கள் முறையாக இல்லை. மேலும் விடைத்தாள் பாதுகாக்கப்பட்ட விதமும் முறையாக இல்லை – பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
tnpsc annamalai

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் குரூப் 4 தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “எந்த தேர்வாக இருந்தாலும் சிலபஸில் இருந்து கேள்வி கேட்க வேண்டும். குரூப் 4 தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில் சில கேள்விகள் சிலபஸிலே இல்லை. இந்தக் கேள்விகள் எல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சொற்றொடர்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 

மைனஸ் மதிப்பெண் இல்லாததால் எல்லோரும் ஏதேனும் ஒரு விடையை தேர்வு செய்வார்கள். சிலபஸில் இருந்து கேள்விகள் வந்தால் தான் தேர்வரின் திறமையை அறிய முடியும். 10% கேள்விகள் வேண்டுமானலும் சிலபஸில் இல்லாமல் வரலாம்.

அடுத்தாக சில தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வுக்குப் பிறகு விடைத்தாள்கள் பாதுகாக்கப்பட்ட விதம் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. சீல் பிரிக்கப்பட்டிருக்கிறது. சில பெட்டிகளில் சரியாக சீலிடப்படவில்லை. 

Advertisment
Advertisements

லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதிய குரூப் 4 தேர்வில் வினாக்கள் முறையாக இல்லை. மேலும் விடைத்தாள் பாதுகாக்கப்பட்ட விதமும் முறையாக இல்லை என்பது தான் எங்கள் குற்றச்சாட்டு. ஒரு தேர்வு கடினமானதாக இருக்கலாம். ஆனால் சிலபஸூக்குள் இருக்க வேண்டும். ஆனால் இந்தநிலையில், தி.மு.க.,வினர் மத்திய அரசு தேர்வுகளை குறை கூறுகின்றனர்,” என்று அண்ணாமலை பதிலளித்தார்.

முன்னதாக குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவை ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது;

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த 12.07.2025, சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்வில், தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத, கேள்விகளே புரியாத வண்ணம், மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன என, தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

எதிர்மறை மதிப்பெண் இல்லை என்பதால், அனைத்துத் தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேர்வுக்குக் கடினமாக உழைத்துத் தயாரானவர்களும், இறுதியில் அதிர்ஷ்டம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு வேலைக்குத் தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்துப் பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டியதும் கூட. 

அரசு வேலை என்ற கனவுகளோடு தேர்வுக்குத் தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை. எனவே, தமிழக அரசு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் அல்லது, ஒட்டுமொத்தமாக அந்தக் கேள்விகளை நீக்கி, மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற பாடத்திடத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

Tnpsc Group4 Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: