CBSE Board Class 10, 12 Exam 2021: பிரதமர் நரேந்திர மோடி கல்வி அமைச்சகத்தின் உயரதிகாரிகளை சந்தித்த பிறகு, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. மேலும், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மத்திய கல்வி அமைச்சகத்தின் உயரதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேர்வு வாரியத்தால் உருவாக்கப்படுகிற ஒரு புறநிலை அளவுகோலின் அடிப்படையில் தயாரிக்கப்படும். இந்த அடிப்படையில் மாணவ/மாணவிகளுக்கு அளிக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத எந்தவொரு தேர்வரும் ஒரு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல் தேர்வுகள் நடத்த உரிய நிபந்தனைகள் இருக்கும்” என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
12ம் வகுப்பு தேர்வுகளைப் பொறுத்தவரை, புதிய தேதிகளை முடிவு செய்வதற்கும், தேர்வு தொடங்குவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அறிவிப்பை வெளியிடுவதற்கும் ஜூன் 1 ம் தேதி மத்திய அரசு நிலைமையை ஆய்வு செய்யும்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முன்னதாக மே 4 முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்வது அல்லது ஆன்லைன் வழி தேர்வுகளை ஏற்பாடு செய்வது விருப்பமல்ல என்று அமைச்சக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். “சிபிஎஸ்இ என்பது நாடு முழுவதும் பரவியுள்ள மாணவர்களைக் கொண்ட ஒரு தேசிய கல்வி வாரியம். ஒரு சின்ன அறிவிப்பில் ஆன்லைனில் தேர்வு நடத்த முடியாது. ஆன்லைன் முறையை ஒரு மாணவர் எப்படி வேகமாக தெரிந்துகொள்வார்? ” என்று ஒரு அதிகாரி கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருவதாலும், பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மாணவர்களின் குரல்கள் அதிகரித்து வருவதாலும் மாநில அரசுகள் பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்க கோருவதாலும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு தேர்வு அட்டவணையை மறுபரிசீலனை செய்யுமாறு செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார். மகாராஷ்டிரா மாநிலமும் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. தேசிய ஒருமித்த கருத்தை வளர்த்துக் கொள்வதற்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பிற பள்ளி பொதுத் தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சகத்திடம் கோரியுள்ளது.
இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சியின் ஆதரவும் கிடைத்துள்ளது. கோவிட் -19 தொற்று எண்ணிகையில் பெரிய அளவில் உயர்வு இருந்தபோதிலும், மே பொதுத் தேர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தனது முடிவை மறுபரிசீலனை செய்ய சிபிஎஸ்இக்கு தலையிட்டு வழிநடத்துமாறு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் வலியுறுத்தியுள்ளனர். கோவிட் -19 இரண்டாவது அலைக்கு மத்தியில், தேர்வு மையங்களில் ஒன்றுகூடுவது குறித்து லட்சக்கணக்கான குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் அச்சங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரியங்கா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் பள்ளி வாரியங்கள் ஏற்கனவே தங்கள் மாநில பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"