மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்புத் தேர்வுகள் மாணவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. சமீபத்திய 12ஆம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணிதத் தேர்வுகள் வழக்கத்திற்கு மாறாக கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறிவருகின்றனர். அவர்களில் சிலர் புகார் எழுப்பியுள்ள நிலையில், பல மாணவர்கள் சமூக ஊடகங்களிலும் இந்த பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர். மேலும், மாணவர்கள் இந்த பாடங்களுக்கு கருணை மதிப்பெண்கள் (Grace Marks) வழங்க சிபிஎஸ்இக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதன் விளைவு ஏற்கனவே மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறிய மாணவர்கள், சிக்கலான ஆங்கிலம் மற்றும் கணிதத் தாள் காரணமாக, குறைந்த மதிப்பெண்களைப் பெற பயப்படுவதாகக் கூறுகின்றனர்.
ஆங்கிலம் மற்றும் கணிதம் தாள் கடினமாக இருந்ததாகவும் மற்றும் விடையளிக்க அதிக நேரம் தேவைப்படுவதாக இருந்ததாகவும் மாணவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் மக்களவை உறுப்பினர் எம்.கே.பிரேமச்சந்திரனும் இதே பிரச்னையை மக்களவையில் எழுப்பினார். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளின் கணிதம் மற்றும் ஆங்கிலத் தாள்கள் "மிகக் கடினமானவை" என்று அவர் கூறினார். மேலும், ஏனெனில் கேள்விகள் "நீண்ட விடையளிக்க கூடிய வகையிலும் மற்றும் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்தும் கேட்கப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களின் நலன் கருதி இந்த இரண்டு தாள்களுக்கான மதிப்பீட்டு செயல்முறையை "தாராளமயமாக" (Liberal) மாற்றுவது குறித்து கல்வி அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என்றும் எம்.பி வலியுறுத்தினார்.
ஜீரோ ஹவரின் போது பிரச்சினையை எழுப்பிய கேரளாவைச் சேர்ந்த புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) தலைவர் எம்.கே.பிரேமச்சந்திரன், முறையே டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய கணிதம் மற்றும் ஆங்கிலத் தேர்வுகளை எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் “மனச்சோர்வடைந்துள்ளனர்” என்று கூறினார்.
வெள்ளிக்கிழமை, மாணவர்கள் 12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு எழுதினர். மேலும் ஆங்கிலம் மற்றும் கணிதத் தேர்வுகளைப் போலவே இயற்பியல் தாளும் கடினமாக இருப்பதாக பல மாணவர்கள் கூறி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil