பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எந்தெந்த பள்ளிகளுக்கு பொருந் தும் என்பதை மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கல்வி உரிமைச் சட்டத்தில் 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு ஆல் பாஸ் கொள்கையில் மீண்டும் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதில், 5-ம் வகுப்பு 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும், தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே தொடர்வார்கள். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவார்கள். இருப்பினும், தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்னர் எந்த மாணவர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய விதி கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த அணுகுமுறையை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
குஜராத், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் மேல் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கேரளா, தமிழ்நாடு ஆகியிஅ மாநிலங்கள் மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஹரியானா மற்றும் புதுச்சேரி இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த முடிவால், கிராமப்புர மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் தொடக்கக்கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1.4.2010-ல் நடைமுறைக்கு வந்தது. அனைத்துக் குழந்தைகளுக்கும் வீட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்குள் தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் முக்கிய இலக்கு ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.