பொதுத்தேர்வுகள் இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில், தேர்வின் கடைசி நாளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும். பொதுத் தேர்வு முடியும் நாட்களில் மாணவர்களில் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.
இந்தநிலையில், தேர்வு முடியும் கடைசி நாள் அன்று உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
“மார்ச், ஏப்ரல் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு / முதலாம் ஆண்டு, இடைநிலை பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் முடியும் நாளன்று மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் காவலர்களை பாதுகாப்பு பணிக்கு அமர்த்திடுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தேர்வு முடியும் நேரத்தில் வருகை புரிந்து மாணவர்கள் அமைதியாக வெளியே செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.