மாணவ, மாணவிகளுக்கு பேட்மிண்டன், நீச்சல், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுடன் கோடைகால இலவச பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 25 முதல் மே 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மாவட்டத்துக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 25 முதல் மே 15 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
இந்த பயிற்சி முகாமில் காலை, மாலை என இரு வேளைகளும் தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
சென்னை மாவட்ட விளையாட்டு அரங்கம் நேரு பூங்காவில் - தடகளம், இறகுபந்து (பேட்மிண்டன்); செனாய் நகரில் - நீச்சல், பேட்மிண்டன்; முகப்பேர் விளையாட்டு அரங்கில் - பேட்மிண்டன், கூடைப்பந்து; கோபாலபுரம் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் – குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.
மேலும், பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் - தடகளம், ஜூடோ, கையுந்து பந்து, பளுதூக்குதல், குத்துச்சண்டை; உள் விளையாட்டு அரங்கில் - கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், குத்துச்சண்டை, ஏ.ஜி.பி விளையாட்டு அரங்கில் - பேட்மிண்டன், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல்; எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் - ஹாக்கி; நுங்கம்பாக்கம் விளையாட்டு அரங்கில் - டென்னிஸ்; புதூர் மாணவர் விளையாட்டு விடுதியில் - கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன.
கோடைகால பயிற்சி முகாமில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு இந்த விளையாட்டுகள் நடத்தப்படும். இந்தக் கோடைக்கால பயிற்சி முகாமில் விருப்பமுள்ள மாணவ மாணவிகள் கலந்துக் கொள்ளலாம். பயிற்சி முகாமானது முற்றிலும் இலவசமாக நடைபெற்று பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தை நேரிலோ அல்லது 7401703480 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.