Advertisment

இந்தியாவிலே இல்லாத மாணவருக்கு 3 மாநிலங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டது எப்படி? என்.டி.ஏ-வுக்கு ஐகோர்ட் கண்டனம்

தமிழ்நாட்டில் மாணவிகள் நீட் தேர்வுக்கு தாலி அணிந்து வந்தால் கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள்; இப்படி இருந்தும் ஆள்மாறாட்ட மோசடி நடந்தது எப்படி? தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்

author-image
WebDesk
New Update
Madurai Bench of Madras High Court on untouchability Dindigul Vellabommanpatti Village temple festive case Tamil News

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. 

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகாரில் மாணவர் உதித் சூர்யா உட்பட 27 பேரை குற்றவாளிகளாக சேர்த்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 27 ஆவது குற்றவாளியாக உள்ள தருண்மோகன் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வில் நேற்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு முக்கியமான கட்டத்தில் உள்ளதாகவும், இந்த மோசடியில் மனுதாரர் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், தேசிய தேர்வு முகமையிடம் ஆள்மாறாட்ட புகார் தொடர்பான விவரங்களை முறையாகக் கேட்டும் பதில் தரவில்லை என்பதால், வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.  

இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் தீவிரமான குற்றச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார். 

தொடர்ந்து, தேசிய தேர்வு முகமையை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, ஆள்மாறாட்டம் தொடர்பான புகாருக்கு உரிய விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனையடுத்து இறுதி உத்தரவுக்காக இந்த வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி தொடர்பான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க மறுப்பது ஏன் என்று நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பினார்.  

மேலும், இந்தியாவிலேயே இல்லாத மாணவருக்கு மேற்குவங்கம் (கல்கத்தா), டெல்லி, உத்திரபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மாணவிகள் நீட் தேர்வுக்கு தாலி அணிந்து வந்தால் கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள். அதேநேரம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் கொடுக்க வேண்டிய நிலையில், ஆள்மாறாட்டம் செய்து, எப்படி தேர்வு எழுத அனுமதித்தீர்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, நீட் ஆள்மாறாட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக தேசிய தேர்வு முகமை செயல்படுவது போல் தெரிகிறது. இதுபோன்ற அதிகாரிகளை ஏன் கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தேசிய தேர்வு முகமை அலுவலர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தார். 

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைக்கு பதிலளிக்கு மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 15 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment