கள்ளர் நலப் பள்ளிகளில் நடத்தப்பட உள்ள பொது மாறுதல் கலந்தாய்வுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில், ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, பதவி மூப்பு அடிப்படையில், காலி பணியிடங்களுக்கு ஏற்ப, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக ஆண்டுதோறும் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் பணி மூப்பு பட்டியலுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார்.
”திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பட்டி அரசு கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் விஜயகுமார் ஆகிய நான் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். பொது இடமாறுதல் கலந்தாய்வுக்காக காத்திருக்கிறேன். இந்நிலையில் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கான பணி மூப்பு பட்டியலை கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதற்கான வழிகாட்டுதல்கள் 2023-ல் வெளியிடப்பட்டது.
அதன்படி கள்ளர் சீரமைப்பு பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக ஒரு பள்ளியில் 6 மாதம் பணிபுரிந்தவர் பணிமூப்பு பட்டியலில் எனக்கு முன்பாக சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கும், பணி மூப்பு பட்டியலுக்கும் தடை விதிக்க வேண்டும். முறையான பணி மூப்பு பட்டியலை தயாரித்து கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்" இவ்வாறு விஜயகுமார் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியலுக்கு ஆட்சேபனை தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை. எனவே அந்த பட்டியலுக்கு தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி விக்டோரியா கவுரி உத்தரவிட்டார், மேலும் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“