கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கான்பூா் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் முனைவா் நச்சிகேதா திவாரி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், "உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் நாகரிகத்திலும் ஒரு அடிப்படை உண்டு. ஐரோப்பிய நாடுகள் மொழியையும், மத்திய கிழக்கு நாடுகள் மதத்தையும் , ஆப்பிரிக்க நாடுகள் பழங்குடியின பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டன.
பாரத நாட்டின் நாகரிகத்தின் செழுமைக்கு மொழி, மதம், உணவு, இனம் ஆகியன அடிப்படையாக அமையவில்லை. பாரத நாகரிகம் அறிவை அடித்தளமாகக் கொண்டது. இங்குத் தோன்றிய இந்து, பெளத்தம், சமணம், சீக்கியம் ஆகிய அனைத்து மதங்களும் அறிவின் அடிப்படையில் தோன்றியவை. அனைத்து துறைகளிலும் உலகிற்கு அறிவைத் தருகின்ற நாடாக நம் நாடு விளங்குகிறது எனக் கூறினார்". இதைத் தொடர்ந்து, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசு வழங்கி கௌரவித்தார்.
கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி - பி.ரஹ்மான்