கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு கால அட்டவணையையும் பலகலைக்கழக மானியக் குழு வெளியிட்டது.
எந்தவொரு கல்வி அமைப்பிலும் மாணவர்கள் கற்றுக் கொண்டதை மதிப்பீடு செய்வது என்பது மிக மிக முக்கியமான மைல் கல்லாகும் என்று தெரிவித்த யுஜிசி, " இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் 2020 இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடக்கும் என்று தெரிவித்தது. மேலும், இடையில் உள்ள பருவங்கள் / ஆண்டுத் தேர்வுகள் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கனவே 29-4-2020 அன்று அறிவிக்கப்பட்டபடி மாற்றம் இல்லாமல் ( 16.07.2020 to 31.07.2020) அப்படியே தொடரும் என்று தெரிவித்தது.
இதற்கிடையே, கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், கல்லூரிகள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் தற்போது நிலவுவதாகவும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க அந்தந்த மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் பழனிசாமி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.
பஞ்சாப், மகாராஷ்டிரா, ஓடிசா போன்ற மூன்று மாநிலங்களும் யுஜிசியின் வழிமுறைகளுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கோவிட் -19 போன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில் “அசாத்திய முடிவுகள்” எடுக்கப்பட வேண்டும் என்று கெஜ்ரிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி எழுதிய கடிதத்தில், " 29-4-2020 அன்று யுஜிசி தேர்வுகள் மற்றும் கல்வியாண்டு கால அட்டவணை குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் தேர்வு குறித்த அறிவுரைகள் மட்டும் வழங்கியது. ஆனால், ஜூலை 6 அன்று வெளியான திருத்தப்பட்ட வழிமுறைகள் செம்படம்பர் மாதத்துக்குள் தேர்வுகளை நடத்த நிர்பந்திக்கின்றன. யுஜிசியின் இந்த நடவடிக்கை மாணவர்களின் ஆரோக்கியம். பாதுகாப்பு, பாரபட்சமற்றநிலை, நியாயம் மற்றும் சமவாய்ப்பு ஆகியவற்றை பறிப்பதாக உள்ளது. பிரதமர் இதில் உடனடியாக தலையிட்டு முந்தைய நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி தனது கடிதத்தில், " பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் வசதிக்கேற்ப தேர்வுகளை நடத்திக்கொள்ள பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), கடந்த 29.04.2020 அன்று வெளியிட்ட விதிமுறைகளில் அனுமதி அளித்தது. ஆனால், கடந்த 6-ம்தேதி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட திருத்தப்பட்ட வழிமுறைகளில் அனைத்து கல்வி நிறுவனங்களும் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
கல்லூரிகள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் உள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு மத்திய அமைச்சர் @DrRPNishank அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/95WfaxzUjz
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 11, 2020
பல மாணவர்கள் வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சிக்கிக் கொண்டு இருப்பதல், அவர்களால் தேர்வு மையங்களுக்கு வர முடியாத சூழல் நிலவுவதால் இந்த புதிய அறிவிப்பு பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் பலரால் இணைய வசதியை அணுக முடியாத சூழல் நிலவுவதால் இணையவழி தேர்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது. மேலும், கல்லூரிகள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த முடியா சூழல் உள்ளது" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.