திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 143 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஒவ்வொரு கல்லூரிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த வேண்டுகோள் கடிதத்தில், "தமிழக அரசு அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு பொதுவான பாடத்திட்டத்தை நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த முயற்சித்து வருகிறது. பொதுவான பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு விதிவிலக்கு வழங்குவது சிறப்புடையதாக இருக்கும்.
பல்கலைக்கழக துறைகளுக்கு தனித்துவமான பாடத்திட்டமே உகந்ததாக இருக்கும். உயர்கல்வி நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் தனித்துவமான துறைகளில் அறிவுத்திறனை அகண்டமாக்கும். அத்தகைய தனித்துவமான துறைகளில் தேர்ந்த வல்லுனர்களை உருவாக்குவதை உயர்கல்வி நிறுவனங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் தங்கள் வரையறைக்கு உட்பட்ட நகரம் மற்றும் கிராமங்களில் தேவைக்கு ஏற்ற புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தன்னாட்சி நிறுவன அந்தஸ்து உடைய பல்கலைக்கழகங்கள் பொதுவான பாடத்திட்டத்தை பின்பற்றுவதன் மூலம் தங்கள் தன்னாட்சி அந்தஸ்தை இழக்கும் அபாயம் ஏற்படும். பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்களுக்கான நிலைக் குழு மற்றும் அதன் பாடத்திட்ட குழு ஆகியவை பல்வேறு தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்து உறுப்பினர்களையும் மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்த உள் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
இத்தகைய உறுப்பினர்கள் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி, தங்களது ஆய்வுக்கூடங்கள் மூலமாக நவீன பாடங்களை வழங்க முடியும். இத்தகைய உட்கட்டமைப்பு வசதிகள் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகங்களை மேம்படுத்தி காட்டுகின்றன. பல்கலைக்கழகங்கள் பல்வேறு துறைகள் பல்வேறு அரசு சார் நிறுவனங்களில் இருந்து சில தனித்துவமான ஆராய்ச்சிகளுக்காக சில சிறப்பு நிதியை பெறுகின்றன. அத்தகைய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களில் படித்திருந்தால் தான் சிறப்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்.
பல்கலைக்கழகங்கள் பொது பாடத்திட்டங்களை மேற்கொள்ளாமல் தனித்துவமான பாடத்திட்டங்களை வழங்கினால் மட்டுமே துறைகளுக்கு பொருத்தமான ஆராய்ச்சியாளர்களை உருவாக்க முடியும். பல்கலைக்கழக துறைகளில் முதுகலை பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்கள் பல நவீன தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதில் மட்டுமின்றி உதவித்தொகையுடன் வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ளும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
முதுகலை பாடங்களை கைவிடுவதால் கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவர்" என பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வு பேராசிரியர் சங்கத்தினர் முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“