தேசிய தேர்வு வாரியம் (NBE) நேற்று சனிக்கிழமை முதுநிலை நீட் (NEET-PG) 2023க்கான தேதிகளை வெளியிட்டது. இன்டர்ன்ஷிப்பை முடிப்பதற்கான கட்-ஆஃப் தேதிகளையும் வெளியிட்டது. அந்தவகையில் தேர்வு மார்ச் 5-ம் தேதியும், இன்டர்ன்ஷிப் கட்-ஆஃப் தேதி மார்ச் 31-ம் தேதியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 50% மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தகுதி நீக்கம் அடைய வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கொரோனாவிற்குப் பிறகு சேர்க்கை தேதிகளை முறைப்படுத்த தேர்வு வாரியம் முயற்சித்து வருகிறது. அந்தவகையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தேர்வு மார்ச் 5-ம் தேதி நடத்தப்படும் என்றும், மார்ச் 31 க்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் முதுநிலை நீட் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கும் புதிய வகை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பகுதிகளாக தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர்கள் மருத்துவர்களாக பதிவு செய்வதற்கும் மேலும் பிஜி படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் அடிப்படையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரேஷன் ஆஃப் ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன் (The Federation of Resident Doctors’ Associatio- FORDA) தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்வு வாரியத்தில் அறிவிப்பை பதிவிட்டு, "50% க்கும் அதிகமான மருத்துவ பயிற்சியாளர்கள் (interns) தகுதியற்றவர்களாகின்றனர். அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் தேர்வுக்கு தகுதியற்றவர்கள் ஆகிவிடுவர். ஒத்திவைப்பு கோரிக்கைகள் மற்றும் கடைசி நிமிட குழப்பத்திற்கு வழிவகுக்கும். இதற்கு அவசரத் தீர்மானம் தேவை" என்று பதிவிட்டுள்ளது.
மே மாதம் வரை நீட்டிக்க வேண்டும்
அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் (FAIMA) தேசிய தலைவர் டாக்டர் ரோஹன் கிருஷ்ணன் கூறுகையில், "இது நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனை. இது கொரோனா காலத்தில் மேலும் மோசமடைந்துள்ளது. சில மாநிலங்கள் எம்பிபிஎஸ் இறுதிப் செமஸ்டருக்கான முடிவுகளை அறிவிப்பதில் எப்போதும் தாமதம் செய்கின்றனர். இதனால் மாணவர்கள் கட்டாய இன்டர்ன்ஷிப் பயிற்சியில் சேருவதில் தாமதம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து முடிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வியில் தாமதங்கள் ஏற்பட்டன" என்றார்.
தற்போதைய கட்-ஆஃப் தேதி, " 2017-ம் ஆண்டு பேட்ச் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வு எழுத தகுதியற்றவர்களாக மாற்றுகிறது. எனவே, மே மாதம் வரை இன்டர்ன்ஷிப் கட்-ஆஃப் தேதியை அதிகரிக்க வேண்டும்" என்றார்.
கடந்த ஆண்டும் தாமதம்
பி.ஜி நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ளும் முன் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான ஓராண்டு கட்டாயப் பயிற்சிக்கான கட்-ஆஃப் தேதி கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலை காரணமாக சில மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் முடிக்க தாமதமானது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் முதுகலை தேர்வு கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் இல்லாமல் சிரமம் ஏற்பட்டது. பி.ஜி மாணவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
FORDA மற்றும் FAIMA அமைப்பு மருத்துவர்கள், 2021 டிசம்பரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.ஜி நீட் கவுன்சிலிங்கை உடனடியாக தொடங்குமாறு வலியுறுத்தினர். இது பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான புதிய ஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற வழக்குகளின் காரணமாக பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2021-க்கான கவுன்சிலிங் பிப்ரவரி 2022 இல் தொடங்கியது. 2022 பி.ஜி பேட்ச் தேர்வுகள் முந்தைய ஆண்டுக்கான கவுன்சிலிங் முடிந்த சில நாட்களுகளில் நடத்தப்பட்டன. 10 நாட்களுக்குள் ரிசல்ட் அறிவிக்கப்பட்டாலும், சில நடைமுறை சிக்கலால் சமீபத்தில் தான் இதற்கான கவுன்சிலிங் நடைபெற்று முடிந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/