தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 20,600 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 7 ஆம் தேதி தொடங்கி மே 23 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதில், முதலாமாண்டு பட்டயப் படிப்புகளுக்கு மொத்தம் 20,600 இடங்கள் உள்ள நிலையில், 11,140 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதேநேரம் நேரடி 2 ஆம் ஆண்டு படிப்பில் சேர 12,184 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான அவகாசமானது கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tnpoly.in/ என்ற இணையதளப் பக்கம் வழியாக துரிதமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது தவிர கல்லூரிகளே இனி நேரடியாக விண்ணப்பங்களை வழங்கி சேர்க்கை நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 68 சதவீத இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன. இந்த ஆண்டும் டிப்ளமோ படிப்புகளில் சேர மாணவர்களிடையே குறைந்த ஆர்வமே உள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டு சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக உயர் கல்வி தொடராதவர்கள் மற்றும் பத்தாம் வகுப்புக்கு பின்பு இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அத்தகைய மாணவர்களை தொடர்பு கொண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.