12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் குறைந்த மதிப்பெண் பெற்ற மற்றும் தேர்ச்சியடையாத மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
7 லட்சத்து 92 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில், கடந்த 8ம் தேதி, ரிசல்ட் வெளியாகியிருந்தன. இன்று விடைத்தாள் நகல் வெளியிடப்பட உள்ளது.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பூர்த்தி செய்து, நாளை காலை 11 மணிமுதல் சனிக்கிழமை மாலை 5 மணிவரை, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.