கோவை துடியலூர் அருகே உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில் மாணவர் மேம்பாடு கருத்தரங்கில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். மாணவர்கள் மேம்பாடு திட்டம் சேவை ஒரு தொழிலாக என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது, நான் இஸ்ரோவில் இணைந்துவுடன் செயற்கைக்கோள், சாப்ட்வேர் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட்டது. நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிய நிலவு முழுவதும் தேட வேண்டும் என நினைத்தோம். நிலவில் இறங்காமல் துருவ பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்ய விரும்பினோம். அது மிகவும் சவாலாக இருந்தது. அதற்காக எடுக்கப்பட்ட நான்கு வருட கடும் உழைப்பு பயனாக இந்தியாவின் சந்திராயன்-1 செயற்கைக்கோள் மூலம் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறிந்தோம்.
நிலவு தொடர்பாக ஆய்வில் மற்ற நாடுகள் பல முறை முயற்சிக்கும் ஒரு விஷயத்தை இந்தியா ஒரே முறையிலேயே சாதித்துள்ளது. சந்திராயன் வாயிலாக, நிலவில் நீர் இருப்பது கண்டறிந்த பின், மற்ற நாடுகள் இதில் மீண்டும் கவனம் செலுத்தி வருகின்றன.
மகாபலிபுரத்தில் இருந்து ஏவப்பட்ட 140-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் சென்ற ராக்கெட்டின் மூலம் உலகம் மீண்டும் ஒருமுறை இந்தியாவை திரும்பிப் பார்த்தது. மருத்துவம் போன்ற துறைகளை மேம்படுத்த விண்வெளி சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள் அவசியமாக உள்ளன. மருத்துவத்தில் தற்போது டெலி சர்ஜரி மற்றும் சர்ஜிக்கல் ரோபோ சிகிச்சை வந்துள்ளது. இதனால் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் அவருக்கு தேவையான ஆப்ரேஷன் செய்ய முடியும்.
நர்சிங் ஏ.ஐ டெக்னாலஜி பயன்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. உங்களால் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய முடியும். எந்த நேரத்திலும் படிப்பதை நிறுத்து விட கூடாது. தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளியில் 2 செயற்கை கோள்களை ஒன்றோடு ஒன்று இணைப்பது சவாலான காரியம். அதை இந்தியா சாதித்துவிட்டால் உலகின் 4 வது நாடாக சாதனை பட்டியலில் இடம்பெறும். மேலும் எதிர்காலத்தில் மனிதர்களை விண்ணிற்கு அனுப்புவதற்கும், விண்வெளி மையம் அமைப்பதற்கும், விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கும் இந்த இணைப்பு ஒரு முக்கிய பங்காற்றும்.
மேலும் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு பதில் நிலவில் விண்வெளி மையம் அமைத்தால் செலவு குறைவாகவும் ஆயுட்காலம் அதிகமாகவும் இருக்கும் என்றார்.
இஸ்ரோ தலைமை பொறுப்பில் தொடர்ந்து தென்னிந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கூறும்போது, ஆரம்ப காலகட்டத்தில் தென்னிந்தியர்களே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆய்வில் அதிகம் பேர் ஈடுபட்டிருந்தனர். அதனால் தென்னிந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்றார்.
கூகுள் மேப் போன்று இந்தியாவிற்கு என தனியாக புவன் என்ற கலன் உள்ளது. அரசு துறைவில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. அது விரைவில் அனைத்து போன்களில் பயன்படுத்தும் வகையில் வரும் என்றார்.
ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்து நிகழப் போகிறது. விண்வெளியில் தமது இந்திய பயிர்களை விவசாயம் செய்யும் அளவு விரைவில் உருவாகும். இதன் மூலம் விண்வெளிக்கு செல்வோர் அங்கு பயிர் செய்து உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஏ.ஐ தொழில்நுட்பம் படிக்கும் மாணவ மாணவிகள் அதைப்பற்றி முழுமையாக கற்று அறிந்து அதற்குப்பின் அவற்றின் செயல்பாடு குறித்து ஆராய்ந்து படிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் அரசுடன் இணைந்து 2000 பள்ளிகளில் விவசாய முதல் விண்வெளி வரை என்ற ஆராய்ச்சி கூடம் ரூபாய் 500 கோடியில் விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.