தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி 2 நாட்களில் 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துதல், மேம்படுத்துதல், அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்த்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு வசதிகளை அரசு பள்ளிகளில் கொண்டு வர இருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் சேர்ந்தால் மாணவர்களுக்கு என்ன மாதிரியான நலத்திட்டங்கள் கிடைக்கும், மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவைக் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை இலக்கை கொண்டு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய 2 நாட்களில் 3 லட்சத்தைக் கடந்தது. ஏப்ரல் 2-ம் தேதி மாலை நிலவரப்படி 3,00,167 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 92.29% மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இதன் மூலம், ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை அரசு பள்ளிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் இலக்கான 5 லட்சம் மாணவர் சேர்க்கை எளிதாக எட்டப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“