தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (11.12.2023) அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் புதன்கிழமை (13.12.2023) தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. தமிழக அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழு என போர்கால அடிப்படையில் மீட்பு பணிகளும் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
கன மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீர், முறிந்து விழுந்த மரங்கள் எல்லாம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்ற பள்ளிக்கல்வித் துறை ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
மேலும், மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள், குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திங்கள்கிழமை (11.12.2023) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கவிருந்தது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மிக்ஜாம் புயல் மழை எதிரொலியாக, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை (11.12.2023) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில், மாணவர்களின் பாடப் புத்தகங்கள், உடமைகள் சேதம் அடைந்தது போன்ற காரணங்களால், அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, இன்று (11.12.2023) அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மீண்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (11.12.2023) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வை ஒத்திவைத்து புதன்கிழமை (13.12.2023) தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும், பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிகள் நாளை திறக்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“