நாட்டின் முதன்மை பொறியியல் நிறுவனங்களாக விளங்கும் 23 ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான குறைந்தபட்ச செயல் திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சகம் குழுவை நியமித்திருந்த நிலையில், ஆன்லைன் மூலம் செமஸ்டர் வகுப்புகள் மேற்கொள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன
இளங்கலை மாணவர்களுக்கான, அடுத்த செமஸ்டர் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமிருப்பதாக பல ஐ.ஐ.டி இயக்குநர்கள் பெயர் வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் பேசினர்.
எவ்வாறாயினும், தகுந்த நேரத்தில் பி.எச்.டி மாணவர்களை மீண்டும் அழைத்து வர ஐ.ஐ.டி.கள் விரும்புவதால், வளாகம் முற்றிலும் மூடப்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆன்லைனில் வகுப்புகளை அணுக ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் மற்றும் போதிய இன்டர்நெட் இணைப்பு இல்லாத மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் ஐ.ஐ.டி நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.
கடந்த வாரம், ஐ.ஐ.டி கவுன்சிலின் நிலைக்குழு புதிய கல்வி அமர்வைத் தொடங்குவதில் உள்ள சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அதற்குரிய தீர்வுகளை வழங்குவதற்கும் இயக்குனர்கள் கொண்ட துணைக்குழுவை அமைத்தது. துணைக் குழு தனது அறிக்கையை இந்த வாரத்தில் சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தலைமையில் செயல்படும் ஐ.ஐ.டி கவுன்சிலின் ஒப்புதலுக்காக இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
வரும் செமஸ்டர் வகுப்புகளை கிட்டத்தட்ட ஆன்லைனில் தொடர விரும்புவதாக அதிகாரப்பூர்வமாக சென்னை ஐ.ஐ.டி தெரிவித்தது. ஒரு வாரத்திற்கு முன்பு மாணவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில்,“ இன்னும் ஒரு செமஸ்டருக்கு ஆன்லைன் வகுப்புகளைத் தொடர வேண்டியிருக்கும்” என்று அதன் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
மீண்டும், கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டால், பி.எச்.டி மாணவர்கள் முதலில் அழைக்கப்படுவார்கள் என்றும், அதைத் தொடர்ந்து "2020-21 கல்வியாண்டிற்கான புதிய சேர்கை மாணவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த செமஸ்டர் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளாக இருக்கும் பட்சத்தில், கற்பித்தலை எவ்வாறு திறம்பட செய்வது என்பது குறித்த ஆலோசனைகளை ஐ.ஐ.டி மும்பை மாணவர்களிடம் கேட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கும் போது, விடுதிகளில் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டிய சவாலை கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 2021 கல்வி ஆண்டிற்குள், 10% இட ஒதுக்கீடு செய்யும் காலக்கெடுவை ஓராண்டு நீட்டிக்குமாறு ஐஐடி கல்வி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஜூன் மூன்றாம் தேதி செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஐஐடி நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் கூறுகையில், “கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான 20% பிரத்தியோக இடங்கள், உயர் வகுப்பினருக்கான் 10% இடஒதுக்கீடு போன்றவைகள் மூலம் இந்த ஆண்டு கூடுதல் சேர்க்கை எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் தங்கள் வகுப்பறை மற்றும் விடுதிகளை புதுபித்துக் கொண்டிருந்தன. ஆனால், கொரோனா பொது முடக்கநிலை காரணமாக பணிகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது . கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் போது இந்த பணிகளை முடிக்க வாய்ப்பில்லை”என்று தெரிவித்தார்.
கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு தனித்தனி அறையை நிர்வாகம் ஒதுக்கினாலும், குளியலறை,கேண்டீன் போன்ற இடங்களை மாணவர்கள் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க முடியாது என்று ஐ.ஐ.டி இயக்குனர் ஒருவர் தெரிவித்தார்.
மற்றொரு ஐ.ஐ.டி இயக்குனர் இதுகுறித்து கூறுகையில்," இது சமூக விலகல் நெறிமுறையை பின்பற்றுவதோடு நின்று விடுவதில்லை. மாணவர்களை விடுதி அறைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்கள் என்பதை ஐ.ஐ.டி நிறுவனங்கள் எப்படி உறுதி செய்ய முடியும்? ஐ.ஐ.டிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திருப்பி அனுப்ப ஆர்வமாக இருப்பார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை,” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, ஐ.ஐ.டி-குவஹாத்தி பி.எச்.டி மாணவர்களை மீண்டும் வளாகத்திற்கு அனுமதிக்கத் தொடங்கியது. 150 பி.எச்.டி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 15க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே திரும்பி வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil